புதுடெல்லி: புதிய அதிபர் திெரளபதி முர்முவை 'ராஷ்டிரபத்னி' என்று குறிப்பிட்டதற்காக காங்கிரஸ் கட்சி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியினர் நேற்று அமளியில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி அவ்வாறு குறிப்பிட்டது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியதற்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியபோது அவர் இதனை தெரிவித்தார்.
ராஷ்டிரபதி பவனுக்கு அணிவகுத்து செல்வது குறித்து பேசிய அவர், 'ராஷ்டிரபத்னி' என்று குறிப்பிட்டார்.
இதனால் அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாஜகவினர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ஆதிர் ரஞ்சன் சவுத்ரி வேண்டு மென்றே இவ்வாறு ஜனாதிபதியை அவமதித்திருப்பதாக பாஜகவினர் குற்றம்சாட்டுகின்றனர்.
ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறிய கருத்துக்காக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியும் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.
இந்த நிலையில் செய்தியாளர் களிடம் பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தெள்ளத்தெளி வாக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபரை அவமானப்படுத்தி அவர் பேசியிருக்கிறார் என்றார்.
அதே சமயத்தில் விலைவாசி உயர்வு குறித்து விவாதிக்க வலியுறுத்தியும் எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை திரும்பப் பெற வலியுறுத்தியும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.
இதனால் கடும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து மதியம்வரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. 12 மணிக்குப் பிறகும் அமளி நீடித்ததால் மாநிலங்களவை இரண்டு மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
ஆனால் மன்னிப்பு கேட்க போவதில்லை என்று ரஞ்சன் சவுத்ரி கூறியுள்ளார். வாய் தவறி அந்த வார்த்தை வந்துவிட்டது. அதிபரை அவமரியாதை செய்ய வேண்டும் என்ற எண்ணமில்லை. ஊடகங்களிடம் பேசும்போது கவனக்குறைவாக அந்த வார்த்தையைப் பயன் படுத்திவிட்டதாக அவர் கூறினார்.
இந்த நிலையில் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்த கருத்து தொடர் பாக லோக்சபாவில் அமளி ஏற்பட்ட நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா, பாஜக எம்.பி.யிடம் கேள்வி எழுப்பியபோது ஸ்மிருதி இரானி குறுக்கிட்டார்.
அப்போது என்னுடன் பேச வேண்டாம் என அவரிடம் கோபமாக சோனியா காந்தி தெரிவித்துவிட்டு சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே நேற்று அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சியைச் சேர்ந்த மேலும் மூன்று எம்பிக்கள் அவை நடவடிக்கையில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சண்டீப் குமார் பதக், சுஷில் குமார் குப்தா ஆகியோரும் அவர்களில் அடங்குவர். இவர்களுடன் சேர்த்து மொத்தம் 27 எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

