திருவனந்தபுரம்: கேரளாவில் வியாபாரி ஒருவர் தன்னிடம் வழக்கமாக லாட்டரிச் சீட்டு வாங்கும் தாதியருக்காக ஒரு லாட்டரிச் சீட்டை எடுத்து வைத்திருந்தார். அந்தச் சீட்டுக்கு முதல் பரிசாக ரூ. 72 லட்சம் கிடைத்துள்ளது. உடனே கடைக்காரர் தாதியருக்கு தகவல் கொடுத்துள்ளார். கடைக்காரரின் நேர்மையை பலர் பாராட்டி வருகின்றர்.
இடுக்கி மாவட்டம் தொடுபுழா பகுதியில் உள்ள ஒரு லாட்டரி கடையில் அதே பகுதியை சேர்ந்த தாதி சந்தியா என்பவர் லாட்டரிச் சீட்டு வாங்குவார். கடைக்காரர் அவருக்காக ஒரு சீட்டை எடுத்து அதனை தனியாக ஒரு உறையில் போட்டு வைப்பார். பரிசு குலுக்கல் நடந்த பின்னர், அந்த சீட்டுக்கு பரிசு விழுந்திருக்கிறதா? என்பதை பார்த்துவிட்டு அதனை தாதியர் சந்தியாவிடம் தெரிவிப்பார்.
கடைக்காரர் எடுத்து வைக்கும் சீட்டை ஒருபோதும் சந்தியா வாங்கி பார்ப்பதில்லை. கடைக்காரர் கூறுவதை மட்டும் கேட்டுக்கொள்வார்.
இந்த நிலையில் அண்மையில் 'ஸ்திரி சக்தி' லாட்டரி விற்பனை நடந்தது. இதற்கான சீட்டு ஒன்றையும் சந்தியாவுக்காக கடைக்காரர் எடுத்து வைத்திருந்தார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு குலுக்கல் முடிவுகள் வெளியானது. இதில் சந்தியாவுக்காக கடைக் காரர் எடுத்து வைத்திருந்த சீட்டுக்கு முதல் பரிசான ரூ.72 லட்சம் (S$124,600) விழுந்திருந்தது.
இந்த விவரத்தை உடனே தாதி சந்தியாவுக்கு அவர் தெரிவித்தார். இதனை கேட்டு வியப்பில் மூழ்கிய சந்தியா, லாட்டரி விற்பனையாளரின் நேர்மையை பாராட்டினார்.
"எனக்காக கடைக்காரர் எடுத்து வைத்த சீட்டின் எண் எனக்குத் தெரியாது. அவர் நினைத்திருந்தால் சீட்டை மாற்றி இருக்கலாம். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. அவரது நேர்மை என்னை ஆச்சரியப்படுத்துகிறது," என்று கூறியுள்ளார்.
கடைக்காரருக்கு பரிசுப் பணத்தில் ஒரு சிறிய பங்கை சந்தியா கொடுத்தாரா என்பது பற்றி தகவல் இல்லை.