5ஜி சேவைக்கான ஏலத்தின் ஐந்தாம் நாள் நிலவரம்
புதுடெல்லி: 5ஜி அலைக்கற்றை ஏலத்தின் ஐந்தாம் நாளன்று 1.5 லட்சம் கோடி ரூபாய்க்கு அலைக்கற்றை விற்பனையானதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் 5ஜி சேவையை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான நடடிக்கைகள் தொடங்கி உள்ளன.
முதற்கட்டமாக அலைக்கற்றை ஏலம் தொடங்கி உள்ளது. கடந்த சில நாள்களாக நடைபெற்று வரும் ஏலத்தின் மூலம் மத்திய அரசுக்கு கணிசமான வருவாய் கிடைக்கும் என்று பொருளியல், தொழில்நுட்ப நிபுணர்கள் கூறுகின்றனர்.
இம்முறை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ, சுனில் மிட்டலின் பாரதி ஏர்டெல், வோடபோனின் ஐடியா, அதானியின் அதானி என்டர்பிரசைஸ் ஆகிய முன்னணி நிறுவனங்களுக்கு மத்தியில் 5ஜி அலைக்கற்றைகளை வாங்குவதில் பலத்த போட்டி நிலவி வருகிறது.
தொடக்கத்தில் இந்நிறுவனங்கள் ஏலத்தில் வேகம் காட்டவில்லை. செவ்வாய்க்கிழமை அன்று தொடங்கிய ஏலத்தில் சற்றே மந்தநிலை காணப்பட்டதாகத் தகவல் வெளியானது. ஆனால் போகப்போக போட்டி கடுமையாகி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் ஐந்தாவது நாளன்று ரூ.1.49,855 கோடிக்கு அலைக்கற்றைகள் ஏலம் எடுக்கப்பட்டன. இதன்மூலம், 71 விழுக்காடு அலைக்கற்றை விற்கப்பட்டுவிட்டதாக மத்திய அரசு கூறியது.
5ஜி சேவைக்கான இந்த ஏல நடவடிக்கை மொத்தம் ஒன்பது பிரிவுகளாக நடைபெறும். 72 ஜிகாஹெட்ஸ் அலைக்கற்றையை ஏலத்தில் விட்டு, ரூ.4.3 லட்சம் கோடியை திரட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து இருக்கிறது.
5ஜி அலைவரிசையை நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யும் பணி ஆகஸ்ட் 14 ஆம் தேதிக்குள் நடந்து முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அனைத்து நடை முறைகளும் நடைபெற்று வருவதாக மத்திய அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது. எனவே, செப்டம்பர் மாதத்தில் 5ஜி சேவைகள் தொடங்கும் எனவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
விதிகளின்படி 5ஜி அலைக் கற்றை ஏலம் தொடர்பான சில முக்கிய விவரங்களை ஏலம் முடியும்வரை வெளிப்படுத்தக் கூடாது என்பது விதிமுறையாகும்.
சந்தையில் கடும் போட்டி நிலவும்போது வாடிக்கையாளர்களுக்கான சலுகைகள் அதிகரிக்கும் என்றும் சேவையின் தரம் மேம்படும் என்றும் துறைசார் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

