கொழும்பு: இலங்கைப் பொருளியலுக்குப் புத்துயிர் கொடுக்கவும் சிரமமான சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஏதுவாக அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய ஐக்கிய அரசாங்கம் அமைய வேண்டும் என்று அந்த நாட்டின் புதிய அதிபர் ரணில் விக்ரமசிங்க அறிவித்து இருக்கிறார்.
அந்த அரசில் சேரும்படி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர் முறைப்படி அழைப்புவிடுத்து இருக்கிறார்.
அதிபர் என்ற முறையில் புதிய பயணத்தைத் தொடங்க விரும்புகிறேன் என்று திரு ரணில் கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
"அந்தப் பயணத்தில் எல்லாக் கட்சிகளையும் உள்ளடக்க விரும்புகிறேன். அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து ஐக்கிய அரசாங்கத்தை அமைக்க வேண்டும்," என்று ரணில் தெரிவித்து இருக்கிறார்.
அப்படிப்பட்ட ஓர் ஐக்கிய அரசாங்கத்தில் சேர்ந்துகொள்ளும்படி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் திரு ரணில் கடிதம் எழுதி இருக்கிறார்.
இதற்கிடையே, இலங்கைக்கும் அனைத்துலகப் பண நிதியத்துக்கும் இடையில் ஓர் உடன்பாடு ஏற்பட்டது என்றும் ஆனால் கடந்த வாரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்ததால் அந்த உடன்பாடு செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திப்போடப்பட்டுவிட்டது என்றும் அதிபர் ரணில் விக்ரமசிங்க கூறினார்.
இலங்கை வெளிநாட்டு தனி அமைப்புகளுக்கு S$16 பில்லியன் பணத்தைத் திருப்பித் தர வேண்டிய தேவையுள்ளது. இந்த நிலையில், புதிய அரசு அமைந்ததை அடுத்து, பண நிதியத்துடன் இலங்கை பேச்சுவார்த்தையைத் தொடங்கியது. அது வெற்றிகரமான முறையில் நடந்து வந்தது என்று வெள்ளிக்கிழமை இலங்கையின் நிதி அமைச்சு தெரிவித்து இருந்தது.

