விஜயவாடா: ஒரே சமயத்தில் தம்மை மூவாயிரம் பேர் புகைப்படம் எடுத்ததன் மூலம் கின்னஸ் சாதனை படைத்துள்ளார் நடிகையும் ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜா.
நேற்று முன்தினம் விஜயவாடாவில் அவரது இந்தச் சாதனை முயற்சி நிகழ்வு நடைபெற்றது.
கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்காக அமைச்சர் ரோஜாவை ஒரே நேரத்தில் 3,000 பேர் புகைப்படம் எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆந்திர மாநில விளையாட்டு, இளையர் மேம்பாட்டுத் துறை அமைச்சராகப் பொறுப்பு வகிக்கிறார் ரோஜா.
நேற்று முன்தினம் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களைச் சேர்ந்த மூவாயிரம் புகைப்படக்காரர்கள் விஜயவாடாவில் உள்ள தனியார் மண்டபத்தில் குவிந்தனர்.
பின்னர் அந்த மண்டபத்துக்கு வெளியே அமைக்கப்பட்டு இருந்த மேடையில் ரோஜா ஏறி நிற்க, அவரைச் சுற்றி நின்ற புகைப்படக்காரர்கள் அவரைப் படம்பிடித்தனர்.
அனைவரும் ஒருசேர தங்கள் கேமராக்களை இயக்கி, அவரைப் படம்பிடிப்பதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
உலக அளவில் மூவாயிரம் புகைப்படக்காரர்கள் ஒரு பெண் அமைச்சரை இவ்வாறு படம்பிடித்திருப்பது இதுவே முதன்முறையாகும்.
இதன் மூலம் 'வொண்டர் புக் ஆப் ரெக்கார்ட்' கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார் அமைச்சர் ரோஜா. அவருக்கு கின்னஸ் சாதனைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டதாக ஆந்திர ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

