அகமதாபாத்: அமெரிக்கா, இங்கிலாந்துக்கு இணையாக இந்தியா வளர்ச்சி அடைந்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
அகமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், அனைத்துலக நிதி நிர்வாகத்தில் இதுவரை ஆதிக்கம் செலுத்தும் நாடுகளாக அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் திகழ்வதாகவும்.
தற்போது அந்த வரிசையில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது என்றும் குறிப்பிட்டார். மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளர்ந்துள்ளதாக தெரிவித்த அவர், அதிக அளவிலான வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் நாடாகவும் திகழ்கிறது என்றார்.
"கடந்த 2008ஆம் ஆண்டு உலக அளவில் மிகப்பெரும் தேக்க நிலை உருவானது. அப்போது எடுக்கப்பட்ட கொள்கை முடிவுகளால் இந்தியாவின் பொருளாதார சூழலும் பாதிப்புக்குள்ளானது.
"அந்த சமயத்தில் குஜராத் மாநிலம் நிதித்துறையில் மிக முக்கியமான முடிவை மேற்கொண்டது. அப்போது உருவான சிந்தனையின் வெளிப்பாடு இன்று வளர்ச்சியடைந்துள்ளது.
"21ஆம் நூற்றாண்டில் நிதி மற்றும் தொழில்நுட்பம் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. தொழில்நுட்பம் என்று எடுத்துக் கொண்டால் அது அறிவியலும் கணினிச் செயலிகளும் ஒன்றிணைந்தது. இதில் இந்தியாவுக்கு மிகுந்த அனுபவம் உள்ளது. மின்னிலக்க பரிவர்த்தனையில் உலக அளவில் இந்தியாவின் பங்களிப்பு 40 விழுக்காடாக உள்ளது," என்றார் பிரதமர் மோடி.
இந்தியாவின் 130 கோடி மக்களும் நவீன பொருளாதாரத்துடன் இணைந்துள்ளதாகக் குறிப்பிட்ட திரு மோடி, அனைத்து நாடுகளையும் ஒன்றிணைக்கும் பணியை இந்தியா தீவிரமாக மேற்கொண்டு வருகிறது என்றார்.

