புதுடெல்லி: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையும் மீறி, டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை நடத்தி வரும் விசாரணை ஆகியவற்றைக் கண்டித்து இந்தப் போராட்டம் நடைபெற்றது.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி எம்பி, நாடு முழுவதும் வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்து ஆடுகிறது என்றும் அனைத்துப் பொருள்களின் விலையும் கடுமையாக உயர்ந்துவிட்டது என்றும் குற்றம்சாட்டினார்.
மக்கள் படும் வேதனை குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு ஒன்றும் தெரியவில்லை என்றும் இந்திய பொருளியல் குறித்து அமைச்சருக்கு எந்தவிதப் புரிதலும் இல்லை என்றும் விமர்சித்தார் ராகுல்.
"நிதி அமைச்சர் வெறும் ஊதுகுழலாக மட்டுமே செயல்படுகிறார். ஹிட்லரும்கூட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றவர்தான். எனினும், அவர் எவ்வாறு வெற்றி பெற்றார் என்பது எல்லாருக்கும் தெரியும்.
"நாட்டில் உள்ள அனைத்து அமைப்புகளையும் எங்களிடம் ஒப்படைக்கட்டும். தேர்தலில் எப்படி வெல்கிறார்கள் என்பதைக் காண்பிக்கிறேன்," என்றார் ராகுல்.
முன்னதாக, பிரதமர் மோடி வீட்டை முற்றுகையிட முயன்ற காங்கிரசார் காவல்துறையினரால் குண்டுக்கட்டாக அப்புறடுத்தப்பட்டனர்.