பாடிண்டா: பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சி முடிந்து இந்தியாவும் பாகிஸ்தானும் 1947ஆம் ஆண்டு பிரிந்தபோது ஆறு மாதக் குழந்தையான சிகா கானின் குடும்பம் சின்னாபின்னமானது.
அவரது தந்தையும் சகோதரியும் கலவரத்தில் கொல்லப்பட்டனர். தாயாரோ ஆற்றில் குதித்துத் தன் உயிரை மாய்த்துக்கொண்டார். பத்து வயது நிரம்பிய அண்ணன் சாதிக் கான் பாகிஸ்தானுக்குத் தப்பியோடினார்.
கிராமத்தார், உறவினர்கள் ஆகியோரின் கருணையால் வளர்ந்த சிகா, நினைவு தெரிந்த நாளில் இருந்தே தன் குடும்பத்தில் எஞ்சிய ஒரே ஆளான தமையனைத் தேடினார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவர் ஒருவர் உதவ முன்வந்து 'யூடியூப்' பதிவாளர் நசீர் தில்லனின் உதவியுடன் சகோதரர்களைச் சேர்த்து வைக்க முயற்சி எடுத்தார்.
இந்திய சீக்கியர்கள் பாகிஸ்தானின் கர்த்தாபூர் எனும் இடத்தில் உள்ள சீக்கியக் கோயிலுக்கு விசா இல்லாமல் செல்ல அனுமதிக்கப்படும் வாய்ப்பைப் பயன்படுத்தி இவர்களை இணைத்து வைத்தார்.
அணைத்து, ஆனந்தக் கண்ணீர் பெருக்கினர் அண்ணனும் தம்பியும். முஸ்லிமான நசீர் தில்லனும் பாகிஸ்தானிய சீக்கியர் பூபிந்தர் சிங்கும் இதுவரை இத்தகைய 300க்கும் மேற்பட்ட குடும்பங்களை இணைத்து வைத்துள்ளனர்.

