புதுடெல்லி: கடன் வாங்கியவர்களிடம், கடன் வசூலிப்பது குறித்த புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அந்த வங்கி ஏற்கெனவே வெளியிட்ட வழிகாட்டி நெறிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை.
எனவே, நேற்று முன்தினம் அந்த வங்கி கூடுதலாக உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. கடன் வாங்கியவர்களிடம் இருந்து மாதத் தவணையை வசூலிப்பதில் வசூல் முகவர்கள் வங்கியின் விதிமுறைகளைப் பின்பற்றாமல் அடாவடித்தனத்தில் இறங்கி வருகின்றனர். இது பற்றி தகவல் அறிந்த ரிசர்வ் வங்கி, புதிய விதிமுறைகளை அமல்படுத்துவதாக அறிவித்துள்ளது.
வங்கிகள், வங்கிசாரா நிதி நிறுவனங்கள் ஆகியவை தங்களது கடன் வசூல் முகவர்கள், கடன் பெற்றவர்களை எந்த வகையிலும் வாய்மொழியாகவோ, உடல்ரீதியாகவோ துன்புறுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
எவ்வகையிலும் அநாகரிகமான குறுஞ்செய்திகளை அனுப்பக்கூடாது. தொலைபேசியில் மிரட்டல்கள் விடுப்பதோ கூடாது.
ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைப்படி கடன் தவணையைச் செலுத்துமாறு இரவு 7 மணிக்கு பிறகும் காலை 8 மணிக்கு முன்பும் தொலைபேசியில் தொடர்புகொள்ளக்கூடாது.
இந்தப் புதிய உத்தரவுகள், அனைத்து வணிக வங்கிகள், கிராமப்புற வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், வங்கிசாரா நிதி நிறுவனங்கள், சொத்து மறுசீரமைப்பு நிறுவனங்கள், அகில இந்திய நிதி நிறுவனங்கள் ஆகியவற்றுக்குப் பொருந்தும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
இந்நிலையில், மின்னியல் முறையில் கடன் வழங்குவதற்கும் பெறுவதற்கும் புதிய விதிமுறைகளையும் விதித்துள்ளது.
மின்னியல் கடன் மோசடிகளைத் தடுக்கவும் சட்டத்திற்குப் புறம்பான செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தவும் மின்னில் கடன் குறித்து, முதல் கட்ட விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது.

