புதுடெல்லி: இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தையொட்டி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. டெல்லியில் செங்கோட்டை அமைந்துள்ள பகுதியில் மட்டும் பாதுகாப்புப் படையினரும் காவல்துறையினருமாக சுமார் பத்தாயிரம் பேர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியேற்றுகிறார்.
இந்நிகழ்வில் சுமார் 7,000 பேர் பங்கேற்க உள்ளனர். சுதந்திர தினத்தைச் சீர்குலைக்க பயங்கரவாத இயக்கங்கள் திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ள போதிலும், அனைத்து மாநிலங்களும் 75வது சுதந்திர தினத்தை முடிந்தவரை சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளிலும் தேசிய கொடியை பறக்கவிட வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தி இருந்தார். இதை ஏற்றுக்கொண்டு மத்திய, மாநில அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், திரையுலகத்தினர் மட்டுமல்லாமல் சாமானியர்களும் தங்கள் வீடுகளின் முன்பு தேசியகொடியை ஏற்றி வைத்துள்ளனர். நூறு வயதான பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென், குஜராத்தில் உள்ள தமது வீட்டில் தேசிய கொடியேற்றினார்.
இன்று டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றி வைத்து உரையாற்றுவார். இதில் மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முப்படைத் தளபதிகள், உயரதிகாரிகள், வெளிநாட்டுத் தூதர்கள் உள்ளிட்ட ஏழாயிரம் பேர் பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது.
இதையடுத்து செங்கோட்டையைச் சுற்றியுள்ள ஐந்து கிலோ மீட்டர் பரப்பிலான வான் பகுதியில் ஆளில்லா வானூர்திகள், பட்டங்கள், பலூன்கள் ஆகியவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் செங்கோட்டை பகுதி ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
10,000 காவல்துறையினர், பாதுகாப்புப் படையினர் குவிப்பு; டெல்லியில் தீவிர கண்காணிப்பு

