மும்பை: நாடறிந்த இரு பிரபலங்கள் அடுத்தடுத்து காலமாகினர். இந்திய தொழிலதிபரும் பிரபல பங்குச்சந்தை வர்த்தகருமான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா தனது 62 வயதில் நேற்று மும்பையில் காலமானார்.
இதற்கிடையே அகில இந்திய வானொலியின் முதல் தமிழ்ச் செய்தி வாசிப்பாளரான சரோஜ் நாராயணசாமியும் (87 வயது) உடல்நலக்குறைவால் காலமானார்.
62 வயதான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா சிறுநீரக பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிறுநீரக செயலிழப்பால் அவர் இறந்திருக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது.
'இந்தியாவின் வாரன் பஃபெட்' என்று அழைக்கப்படும் அவருடைய நிகர சொத்து மதிப்பு சுமார் 5.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என ஃபோர்ப்ஸ் சஞ்சிகை தெரிவிக்கிறது. கடந்த 1985ஆம் ஆண்டு பங்குச் சந்தையில் ஜுன்ஜுன்வாலா முதலீடு செய்தபோது அவருக்கு வயது 25. தனது உறவினர் ஒருவரிடமிருந்து நூறு அமெரிக்க டாலரை கடனாகப் பெற்று தனது முயற்சியைத் தொடங்கினார்.
நாளடைவில் சொந்த நிறுவனம் தொடங்கி, வெற்றிகரமாக வழிநடத்தி பங்குச்சந்தை வர்த்தகத்தில் பல உயரங்களைத் தொட்டவர் ஜுன்ஜுன்வாலா. 'அவர் தொட்டது எல்லாம் பொன்னாகும் எனப் பெயர் எடுத்துள்ளார்' என்று 'ஃபோர்ப்ஸ்' சஞ்சிகை ஒருமுறை குறிப்பிட்டது.
கடந்த 1980, 90களில் அகில இந்திய வானொலியில் நாள்தோறும் காலை செய்திகளை வாசிப்பார் சரோஜ் நாராயணசாமி.
தனித்துவமிக்க அவரது குரல், தெளிவான உச்சரிப்பு ஆகியவற்றால் நாடு தழுவிய அளவில் அவர் பிரபலமானார். தஞ்சாவூரில் பிறந்த அவர் மும்பையில் கல்வி கற்றார்.
திருமணத்துக்குப் பின்னர் செய்தி வாசிப்பாளர் பணியில் சேர்ந்த அவர், சுமார் 35 ஆண்டுகாலம் அந்தப் பணியில் நீடித்தார். அவருக்கு தமிழக அரசு கலைமாமணி விருதளித்து கௌரவித்தது. முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய், நரசிம்ம ராவ் உள்ளிட்டோரை அவர் நேர்காணல் செய்துள்ளார்.

