இம்பால்: சுதந்திர தினத்தை சீர்குலைக்கும் நோக்கத்துடன் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 11 பயங்கரவாதிகள் கைதாகி உள்ளனர்.
நேற்று முன்தினம் மணிப்பூரில் பஞ்சாப்பிலும் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட அதிரடி சோதனை நடவடிக்கையின்போது, 11 பேரும் சிக்கினர்.
இதற்கிடையே மேகாலயா மாநிலத்தில் ஏராளமான வெடிபொருள்களும் ஆயுதங்களும் சிக்கின. இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் தலைநகர் இம்பாலில், சுதந்திர தின விழாவை சீர்குலைக்கும் நோக்கில் பயங்கரவாதிகள் ஆயுதங்களுடன் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு இரு தினங்களுக்கு முன்னர் ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையை மேற்கொண்டதில் ரகசிய இடத்தில் பதுங்கி இருந்த ஏழு பயங்கரவாதிகள் கைதாகினர்.
இதேபோல் பஞ்சாப் மாநிலத்திலும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இதில் நான்கு பேர் சிக்கினர்.
சண்டிகர் நகரில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டு இருந்ததாகவும் டெல்லி காவல்துறை அளித்த சில தகவல்களின் உதவியோடு சதித்திட்டம் முறியடிக்கப்பட்டதாகவும் பஞ்சாப் காவல்துறை தெரிவித்துள்ளது.

