புதுடெல்லி: இந்தியாவின் அடையாளங்களாகத் திகழும் தலைவர்களை பிரதமர் மோடி இழிவுபடுத்திவிட்டதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
சுதந்திர தினத்தன்று காந்தி, நேரு உள்ளிட்ட தலைவர்களை கொச்சைப்படுத்துவது சரியா என அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
மகாத்மா காந்தி, நேருவுக்கு எதிராக பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதை சகித்துக் கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"தற்போது மத்தியில் ஆட்சியில் உள்ள அரசாங்கம், நமது சுதந்திர போராட்ட வீரர்களின் மகத்தான தியாகங்கள், கடந்தகால சாதனைகளை அற்பமானவை என நிரூபிப்பதில் முனைப்பாக உள்ளது. இதை ஏற்க முடியாது.
"அரசியல் ஆதாயங்களுக்காக வரலாற்று உண்மைகள் குறித்த தவறான அறிக்கைகளை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. அது மட்டுமல்லாது காந்தி, நேரு, பட்டேல், ஆசாத் போன்ற தேசிய தலைவர்களின் மீது இந்த அரசு கேள்விகளையும் விமர்சனங்களையும் எழுப்பி வருகிறது," என்று அறிக்கை ஒன்றில் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்திலும் ஒரு பதிவு இடம்பெற்றுள்ளது.
"பொதுமக்களிடம் கொள்ளையடித்து தேர்ந்த தொழிலதிபர் நண்பர்களின் பையை நிரப்புபவர்கள் மகாத்மா காந்தியின் பெயரை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது," என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாட்டில் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்து வருகிறது என்றும் காங்கிரஸ் சாடிஉள்ளது.