புதுடெல்லி: கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலின்போது பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் சமூக ஊடகங்கள் வழி பொய்யான தகவல்களைப் பரப்பியதாக அண்மைய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
'மைக்ரோசாஃப்ட் இந்தியா'வின் ஆய்வுப் பிரிவு மேற்கொண்ட ஆய்வின்போது கிடைத்த தகவல்களை தெற்காசிய வரலாற்று, கலாச்சார சஞ்சிகை வெளியிட்டுள்ளது.
இரு தரப்பினரும் வெளியிட்ட பொய்யான தகவல்கள் வாட்ஸ் அப் உள்ளிட்ட செயலிகள் மூலமாக மட்டுமல்லாமல் பல்வேறு சட்டபூர்வ அமைப்புகள், நிறுவனங்கள் மூலமாகவும் தொடர்ந்து இணையத்தில் பரப்பப்பட்டதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
"அனைத்து பெரிய கட்சிகளுமே இணையம் வழி தவறான தகவல்களை பரப்பி உள்ளன. தங்களுடைய தேர்தல் வியூகத்தின் ஓர் அங்கமாக இந்த நடவடிக்கையை அவை மேற்கொண்டன.
எதிர்க்கட்சிகள் குறித்து பொய்யான தகவலை வெளியிட்ட அதே வேளையில், தங்கள் மீது நல்லெண்ணம் ஏற்படும் வகையில் நேர்மறை தகவல்களையும் நல்ல கருத்துகளையும் வெளியிட அவை தவறவில்லை," என்று ஆய்வில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கின்றனர். இத்தகவல் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

