'மாநிலங்களை நிதி ரீதியாக பலவீனப்படுத்தும் சதியில் ஈடுபடுகிறது மத்திய அரசு'
புதுடெல்லி: இலவசத் திட்டங்கள் குறித்து பிரதமர் மோடி தெரிவித்துள்ள கருத்துக்கு மாநில முதல்வர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இலவசத் திட்டங்களால் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி பாதிக்கப்படும் என பிரதமர் மோடி அண்மையில் கூறியிருந்தார்.
இதற்கு டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான், தெலுங்கானா மாநிலங்களின் முதல்வா்கள் பிரதமரின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனா்.
இலவசக் கல்வியும் சுகாதாரமும் இலவசத் திட்டங்கள் அல்ல என்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
கல்வியும் சுகாதாரமும் இருந்தால்தான் வறுமையை ஒரே தலைமுறையில் ஒழிக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
"நாம் ஒன்றிணைந்து ஆங்கிலேயரை வெளியேற்றினோம். அதேபோல, நாம் ஒன்றிணைந்தால் இந்தியாவை உலகின் முன்னணி நாடாக மாற்றலாம்," என்றாா் முதல்வர் கெஜ்ரிவால்.
இதற்கிடையே, பஞ்சாப் மாநிலத்தில் சுதந்திர தினத்தன்று தேசியக்கொடியை ஏற்றி வைத்து உரையாற்றிய முதல்வா் பகவந்த் மான், நலத் திட்டம் என்ற பெயரில் பொதுமக்களின் பணம் அவர்களுக்கே திருப்பி அளிக்கப்படுகிறது என்றார்.
"இது இலவசம் அல்ல. பிரதமா் தனது நண்பா்களின் ரூ.10 லட்சம் கோடி கடனைத் தள்ளுபடி செய்கிறாா். அதற்கு என்ன அா்த்தம்?" எனக் கேள்வி எழுப்பினாா் முதல்வர் பகவந்த் மான்.
பொதுமக்களின் நலன்களைப் பேணிக்காப்பதே மாநில அரசின் தலையாய கடமை என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளார்.
வளா்ந்த நாடுகளில் ஏழைகளுக்கும் முதியோருக்கும் வாராந்திர நிதியுதவி அளிக்கப்படுவதாகச் சுட்டிக்காட்டி உள்ள அவர், பொதுநலத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது ஒவ்வோா் அரசின் கடமை என்றார்.
நலத்திட்டங்களை முறையாக நிறைவேற்றாத மத்திய அரசு, மாநில அரசுகள் இலவசங்களை வழங்குவதாகக் கூறி அவமதிப்பதாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கூறியுள்ளார். மத்திய அரசு, அதிகாரத்தை மத்தியில் குவித்து கூட்டாட்சித் தத்துவத்தை சிதைப்பதாகவும் அவர் சாடி உள்ளார்.
"மாநிலங்களை நிதிரீதியாக பலவீனப்படுத்தும் சதிச் செயல்களில் மத்திய அரசு ஈடுபடுகிறது. மத்திய அரசு ஈட்டும் வரி வருவாயில் மாநிலங்களுக்கு 41 விழுக்காடு அளிக்க வேண்டும். ஆனால் வெறும் 29.6 விழுக்காட்டை மட்டுமே அளிக்கிறது," என்றார் சந்திரசேகர ராவ்.
மத்திய அரசானது கூட்டாட்சியின் மதிப்பிற்கு தீங்கிழைப்பதாகவும் உட்கார்ந்திருக்கும் மரக்கிளையையே வெட்டுவது போன்று மத்திய அரசு செயல்படுவதாகவும் அவர் மேலும் சாடி உள்ளார்.

