ஸ்ரீநகர்: 38 ஆண்டுகளுக்கு முன் இமயமலைப் பகுதியில் காணாமல்போன இந்திய ராணுவ வீரரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. சியாச்சன் மலைப்பகுதியில் அவருடைய சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
1984ல் இந்திய-பாகிஸ்தான் எல்லையில் உள்ள சியாச்சன் மலைப்பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சந்திரசேகர் ஹார்போலா உள்ளிட்ட 20 இந்திய இராணுவ வீரர்கள் சிக்கிக்கொண்டனர். 15 பேரின் சடலங்கள் மட்டுமே அப்போது மீட்கப்பட்டன.
சந்திரசேகரின் சடலத்தைக் கண்டுபிடித்த இராணுவப் பிரிவு மற்றொருவரின் உடலையும் கண்டுபிடித்துள்ளது. அவருடைய அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
சந்திரசேகருக்கு முழு இராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறும் என்று கூறப்பட்டது.
சியாச்சன் மலைப்பகுதிக்காக இந்தியாவும் பாகிஸ்தானும் பல ஆண்டுகளாக சண்டையிட்டு வருகின்றன. உலகின் மிக உயரமான ராணுவ மோதல் களமாக சியாச்சன் வர்ணிக்கப்படுகிறது. இந்தப் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவுகளிலும் பனிப்புயல்களிலும் இருதரப்பிலிருந்து பல வீரர்கள் மாண்டுவிட்டனர்.
2012ல் ஏற்பட்ட பனிச்சரிவில் 129 பாகிஸ்தானிய இராணுவ வீரர்கள் மாண்டனர். இதனைத் தொடர்ந்து, 2016ல் பத்து இந்திய வீரர்களும் 2019ல் நான்கு வீரர்களும் சியாச்சன் பனிச்சரிவில் சிக்கி மாண்டுவிட்டனர்.

