அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் ரகசிய இடத்தில் இயங்கி வந்த போதைப்பொருள் ஆலையைக் கண்டுபிடித்து ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளை காவல்துறையினர் கைப்பற்றி உள்ளனர்.
இது தொடர்பாக கிரிராஜ் தீக்ஷித் என்பவர் கைதாகி உள்ளார்.
கடந்த 3ஆம் தேதியன்று மும்பையில் உள்ள நாலச்சோப்ரா என்ற இடத்தில் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு மும்பை காவல்துறை அதிரடிச் சோதனை நடவடிக்கை மேற்கொண்டது.
அப்போது ஒரு வீட்டில் போதைப்பொருள் குவிந்திருப்பது தெரியவந்தது. ஆறு பேர் அங்கு வேலை பார்த்து வந்தனர்.
அங்கிருந்த 700 கிலோ போதைப்பொருளைக் கைப்பற்றி, ஆறு பேரைக் கைது செய்த காவல்துறையினர், பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருளின் மதிப்பு ரூ.1,400 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது, குஜராத் மாநிலத்தில் இயங்கும் போதைப்பொருள் ஆலையில் இருந்துதான் மும்பையில் உள்ள வியாபாரிகளுக்கு போதைப்பொருள் வருகிறது என்பது தெரியவந்தது.
இதையடுத்து மும்பை தனிப்படையினர் குஜராத் சென்று, அங்குள்ள போதைப்பொருள் ஆலையில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது 513 கிலோ எடைஉள்ள எம்டி வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.1,026 கோடி ஆகும்.

