புதுடெல்லி: அரசியல் தரகர் சுகேஷ் சந்திரசேகருடன் நெருக்கமாக இருந்த நடிகை ஜேக்குலின் பெர்னாண்டசுக்கு, தொழிலதிபர் மனைவியை மிரட்டி ரூ.215 கோடி பணம் பறித்த வழக்கில் தொடர்பு உள்ளதாக மத்திய அமலாக்கத்துறை குற்றம்சாட்டி உள்ளது.
இதையடுத்து இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையில் அவரது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
அரசியல் தலைவர்கள், அரசு உயரதிகாரிகள், ஆட்சியில் இருப்பவர்களுடன் தமக்கு தொடர்புள்ளதாகக் கூறி, தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் எனப் பல்வேறு தரப்பினரையும் ஏமாற்றி கோடிக்கணக்கில் பணம் பறித்துள்ளார் சுகேஷ் சந்திரசேகர். அவர் மீது 32 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
சுகேஷுக்கும் இந்தி நடிகை ஜேக்குலினுக்கும் நெருக்கம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. அவருக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசுகளை அள்ளிக்கொடுத்ததுடன், அவரது விமானப் பயணம் உள்ளிட்ட செலவுகளை சுகேஷ் ஏற்றுள்ளார்.
இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட சுகேஷ் அங்கிருந்தபடியே தொழிலதிபர் ஒருவரது மனைவியை மிரட்டி ரூ.215 கோடி பறித்ததாக பண மோசடி வழக்குப் பதிவானது. அதன் விசாரணையின் முடிவில், அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கலானது. இப்போது ஜேக்குலின் பெயரையும் குற்றப்பத்திரிகையில் சேர்த்துள்ளனர். அவருக்கு எதிரான ஆதாரங்கள் உள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.