மகாராஷ்டிரா மாநிலத்தில் விழிப்புநிலை; 2008 சம்பவம் மீண்டும் நிகழாமல் தடுக்க கோரிக்கை
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் ரெய்காட் என்ற மாவட்டம் முழு விழிப்புநிலையில் வைக்கப்பட்டு இருக்கிறது.
அந்த மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீவர்தன் கடற்கரைப் பகுதியில் அதிவேகப் படகு ஒன்றில் இருந்து மூன்று ஏகே-47 துப்பாக்கிகளையும் குண்டுகளையும் அதிகாரிகள் கைப்பிற்றினர். அந்தப் படகு கைவிடப்பட்டு கடலில் மிதந்தது.
இதையடுத்து அந்த மாவட்டம் முழு விழிப்புநிலையில் வைக்கப்பட்டு இருக்கிறது.
தனியார் பாதுகாப்பு நிறுவனம் ஒன்றின் முத்திரையுடன் இருந்த அந்த ஆயுதங்களை உள்ளூர் மக்கள் அதிகாலை 8 மணிக்குக் கண்டதாக ரெய்காட் மாவட்ட ஆட்சியர் மகேந்திரா கல்யாண்கர் கூறினார். அதையடுத்து அந்த மாவட்டத்தில் உள்ள எல்லா காவல்துறை சோதனைச்சாவடிகளிலும் முழு விழிப்புநிலை அமல்படுத்தப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
மும்பையில் கடந்த 2008ஆம் ஆண்டிலும் அதற்கு முன் 1993ஆம் ஆண்டிலும் நிகழ்ந்த பயங்கரவாதச் சம்பவங்களைப் போன்று மறுபடியும் ஒரு சம்பவம் நிகழ்ந்துவிடுவதைத் தடுக்கும் வகையில் மத்திய, மாநில அமைப்புகள் விரைந்து செயலில் இறங்க வேண்டும் என்று ஸ்ரீவர்தன் தொகுதியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் தாக்கரே கோரிக்கை விடுத்தார்.
இதனிடையே, அந்தப் படகு ஆஸ்திரேலியர் ஒருவருக்குச் சொந்தம் என்றும் அது மஸ்கட் வழியாக ஐரோப்பா சென்றுகொண்டு இருந்தபோது வழியில் கடலில் பருவநிலை காரணமாக அது கரைக்கு வர இயலாமல் மிதக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் மகாராஷ்டிரா மாநில உள்துறை அமைச்சர் தேவேந்திரா பட்னாவிஸ் கூறினார்.
இதுவரை பயங்கரவாத சந்தேகம் எதுவும் எழவில்லை என்று குறிப்பிட்ட அமைச்சர், இருந்தாலும் முழுவிழிப்புநிலை தொடர்வதாக தெரிவித்தார்.

