புதுடெல்லி: மத்தியில் ஆளும் பாஜகவின் அதிக அதிகாரம் கொண்ட அமைப்பான ஆட்சிமன்றக்குழுவில் மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.
கட்சியின் கொள்கைகள் போன்றவற்றில் முக்கிய முடிவுகளை எடுக்கும் அந்த அமைப்பில் இருந்து பாஜக மூத்த தலைவர்களான மத்திய அமைச்சர் நிதின் கட்காரியும் மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகானும் நீக்கப்பட்டு உள்ளனர்.
அதே நேரத்தில், கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா உள்ளிட்ட ஆறு புதுமுகங்களுக்கு ஆட்சிமன்றக் குழுவில் இடம் தரப்பட்டுள்ளது.
கட்சியின் மத்திய தேர்தல் குழுவிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதில் மகாராஷ்டிர மாநிலத்தின் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ், ஓம் மாத்தூர் (ராஜஸ்தான்), பாஜக மகளிர் அணி தலைவரான தமிழ்நாட்டின் வானதி சீனிவாசன் (படம்) ஆகியோர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
மத்திய தேர்தல் குழுவில் முன்னாள் மத்திய அமைச்சர் ஷா நவாஸ் உசேனும், ஜூவல் ஓரமும் இப்போது இடம்பெறவில்லை.
இந்தியாவில் 2024ஆம் ஆண்டு ஏப்ரலில் அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது.
அதற்கு பாஜக இப்போதே தயாராகத் தொடங்கி உள்ளது என்பதற்குக் கட்சியில் செய்யப்படுகிற அதிரடி மாற்றங்கள் சான்றாக அமைந்து உள்ளதாக அரசியல் நோக்கர்கள் பலரும் கருதுகின்றனர்.