மாநில மின்பகிர்மான நிறுவனங்கள் ரூ.5,085 கோடி நிலுவைத்தொகை செலுத்தவில்லை
புதுடெல்லி: தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்கள் மின்சாரம் வாங்கவும் விற்கவும் மத்திய அரசு திடீர் தடை விதித்துள்ளது.
இம்மாநிலங்களில் உள்ள மின் பகிர்மான நிறுவனங்கள், மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கில் பாக்கி வைத்துள்ளன.
அந்த வகையில், இம்மாநிலங்கள் ரூ.5,085 கோடி செலுத்த வேண்டி உள்ளதாகவும் நிலுவைத் தொகையை அளித்த பிறகே மின்சாரம் வாங்க, விற்க முடியும் என்றும் தெரியவந்துள்ளது.
ஆக அதிகமாக, தெலுங்கானா மாநிலம் மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு ரூ.1,381 கோடி செலுத்த வேண்டியுள்ளது. இப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள தமிழகம், ரூ.926 கோடி செலுத்த வேண்டியுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ராஜஸ்தான் ரூ.501 கோடியும் ஜம்மு காஷ்மீர் ரூ.435 கோடியும் ஆந்திரா ரூ.413 கோடியும் மகாராஷ்டிரா ரூ.382 கோடியும் மத்தியப் பிரதேசம் ரூ.229 கோடியும் ஜார்கண்ட் ரூ.215 கோடியும் தர வேண்டியுள்ளது.
பீகார், மணிப்பூர், சட்டீஸ்கர், மிசோரம் ஆகிய மாநிலங்களும் நிலுவைத் தொகைகளை இதுவரை செலுத்தவில்லை.
இதையடுத்து, மத்திய அரசு விதித்துள்ள தடை நேற்று முன்தினம் இரவு முதல் அமலுக்கு வந்தது.
தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களின் நிலுவைத்தொகை மிக அதிகமாக உள்ளதால் அவற்றுக்கு மத்திய அரசு அபராதமும் விதித்துள்ளது. சட்ட விதிகளின் அடிப்படையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மத்திய மின்சார அமைச்சு தெரிவித்துள்ளது.
மாநிலங்களுக்கு இடையேயான மின்பகிர்வில் மத்திய அரசு தலையிடக் கூடாது என சில மாநிலங்கள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், மாநிலங்களில் உள்ள மின்பகிர்மான நிறுவனங்களின் நிலுவைத்தொகைகள் கோடிக்கணக்கில் இருப்பதால், மத்திய அரசு இவ்விவகாரத்தில் தலையிட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் தடை காரணமாக, 13 மாநிலங்களிலும் மின் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, நிலக்கரிப் பற்றாக்குறையால் சில மாநிலங்களில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. அதன் காரணமாக, மாநிலங்களில் பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கின.
இதற்கு மத்திய தொகுப்பில் இருந்து போதுமான நிலக்கரி அனுப்பப்படவில்லை என பாதிக்கப்பட்ட மாநிலங்கள் குற்றம்சாட்டின. இப்போது மத்திய அரசு 13 மாநிலங்களுக்குத் தடை விதித்திருப்பதும் விவாதப்பொருளாகி உள்ளது.