சென்னை: மத்திய அரசின் நிதிப்பற்றாக்குறையைவிட தமிழகத்தின் நிதிப்பற்றாக்குறை குறைவானது என்று தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் (படம்) தெரிவித்துள்ளார்.
அரசியலைப்புச் சட்டத்தின்படி, மக்களின் பணம் எவ்வாறு செலவிடப்பட வேண்டும் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் உச்ச நீதிமன்றம் மட்டுமல்லாமல், வேறு எந்த நீதிமன்றத்துக்கும் இல்லை என்று அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது குறிப்பிட்டார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட சட்டமன்றங்களுக்கு மட்டுமே அந்த அதிகாரம் உள்ளது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
"இலவசங்கள் வழங்கப்படுவது தீய செயல் எனில், அதிமுக அரசின் இருசக்கர வாகனங்களுக்கு ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைக்க பிரதமர் டெல்லியில் இருந்து சென்னைக்குப் பறந்துவந்தது ஏன்," என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பினார்.
நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுடனும் ஒப்பிடும்போது தனிநபர் வருவாய், மனிதவள மேம்பாடு, சமூக மேம்பாடு, உயர் கல்வியை மேற்கொள்பவர்கள் விகிதம் ஆகியவற்றில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர், கடன் பெறும் வரம்பைவிட தமிழகத்தின் நிதிப்பற்றாக்குறை குறைவாகவே உள்ளது என்றார்.
"உண்மை நிலவரம் இப்படி இருக்கும்போது சிறப்பாகப் பணியாற்றுவது எப்படி என்பதை எங்களுக்கு யாரோ ஏன் சொல்லித்தர வேண்டும்? நாங்கள் சரியாகப் பணியாற்றுகிறோமா இல்லையா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்," என்றார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.