ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
இதையடுத்து, அங்கு தற்காலிகமாக குடியிருப்பவர்களும் தேர்தலில் வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் மூலம் காஷ்மீரில் தங்கி பணியாற்றும் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரைச் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஜம்மு காஷ்மீரில் பல்வேறு காரணங்களுக்காக தங்கியுள்ள 25 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வாக்காளர் பட்டியலில் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
எனினும், எதிர்க்கட்சிகள் இந்த அறிவிப்பை வரவேற்கவில்லை.
காஷ்மீர் முன்னாள் முதல்வரான உமர் அப்துல்லா, மத்திய அரசு வெளிமாநில வாக்காளர்களை காஷ்மீரில் இறக்குமதி செய்வதாகச் சாடியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பதால்தான், மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்றும் இதன் மூலம் அக்கட்சியால் வெற்றி பெற முடியாது என்றும் உமர் அப்துல்லா கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரைத் தொடர்ந்து ஆள வேண்டும் என்பதற்காக பாஜக தந்திர அரசியலில் ஈடுபடுவதாக முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி கூறியுள்ளார்.