சென்னை: இருதரப்பினரும் இணைந்து செயல்படலாம் என்று தாம் விடுத்த அழைப்பை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் நிராகரித்துவிட்டதால், அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தை தாமே கூட்டுவது என ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு பன்னீர்செல்வம் தரப்புக்கு சாதகமாக உள்ளதாகக் கருதப்படுகிறது. இதனால் உற்சாகம் அடைந்த அவர், கூட்டுத்தலைமையாக இணைந்து செயல்படலாம் என பழனிசாமிக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
30 நாள்களுக்குள் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் இணை ஒருங்கிணைப்பாளரும் மீண்டும் பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால், இணைந்து செயல்படுவதை விரும்பாத எடப்பாடி தரப்பினர், நீதிமன்றத்தில் மேலும் பல மனுக்களைத் தாக்கல் செய்ய தயாராகி வருகின்றனர். இதையடுத்து, பொதுக்குழுவைத் தாமே கூட்டுவது என பன்னீர்செல்வம் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
கூட்டத்துக்கு வருமாறு பழனிசாமி தரப்புக்கும் அழைப்பு விடுக்கப்படும் எனக் கூறப்படும் நிலையில், சட்டப் போராட்டத்துக்கும் தயார் என தமது ஆதரவாளர்களிடம் ஓபிஎஸ் கூறியுள்ளதாகத் தகவல்.