சிங்கப்பூர் தொழில்நுட்பக் கல்விக் கழகக் கல்விச் சேவையின் ஆதரவில் திறனாளர் பற்றாக்குறையைச் சமாளிக்க உதவும் நிலையம்
கவுஹாத்தி: வடகிழக்கு மாநிலமான அசாமின் ஆகப் பெரிய நகரமான குவஹாத்தியில் அமைந்துள்ளது வடகிழக்குத் திறன் நிலையம்.
'ஐடீஸ்' எனப்படும் சிங்கப்பூரின் தொழில்நுட்பக் கல்விக் கழகக் கல்விச் சேவை, அசாம் திறன் மேம்பாட்டுப் பணிக்குழு ஆகியவை இணைந்து தொடங்கிய ஐந்து நிலையங்களில் இதுவும் அடங்கும்.
இதில் 17 முதல் 25 வயது வரையிலானோர் கட்டுப்படியாகும் கட்டணத்தில் தரமான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளைப் பெறமுடியும்.
மார்ச் 2019ல் அமைக்கப்பட்ட இந்த நிலையத்தில் பாடத்திட்ட வடிவமைப்பு, பயிற்றுவிப்பாளர்களுக்குப் பயிற்சி வழங்குதல் போன்ற சேவைகளை வழங்குவதற்கு 'ஐடீசுக்கு' சிங்கப்பூர் அரசாங்கம் நிதியுதவி வழங்கியது.
சில்லறை விற்பனை, அழகு-ஆரோக்கியம், ஹோட்டல் அறை பராமரிப்பு, உணவு-பானம் ஆகிய நான்கு பிரிவுகளில் ஓராண்டுப் பயிற்சி வகுப்புகள் இந்த நிலையத்தில் நடத்தப்படுகின்றன. பயிற்சியின் முடிவில் மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
நேரடிப் பயிற்சிக்கு முக்கியத்துவம் தரும் இந்த நிலையத்தில் பயிலும் 95 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட மாணவர்கள், நல்ல வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
மிகப் பெரிய நிறுவனங்களில் வேலை கிடைத்தாலும் இவர்களுக்குக் கூடுதல் பயிற்சி தேவைப்படாது என்று நிலையத்தின் முதல்வர் இந்திரஜித் சின்ஹா குறிப்பிட்டார். வேலையில் சேர்ந்த ஆறு மாதங்களில் இந்நிலையத்தில் சான்றிதழ் பெற்றவர்களுக்குப் பதவி உயர்வு கிடைத்ததாக அவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் குறிப்பிட்டார்.
போட்டித்தன்மை நிறைந்த வேலைச் சந்தையில் பிறரைவிடவும் வெற்றிகரமாக விளங்க, திறன் மேம்பாட்டு நிலையங்களை நாடும் போக்கு இந்திய இளையர்களிடையே நிலவுகிறது. நிலையத்தில் பயிற்சிபெற ஆண்டுக்கு 16,000 ரூபாய் கட்டணம் செலுத்தினால் போதும். இருப்பினும் எதிர்பார்த்ததைவிடக் குறைவான மாணவர்களே இந்தப் பயிற்சி வகுப்புகளில் பயில்வதாக நிலையத்தின் முதல்வர் தெரிவித்தார்.
எதிர்வரும் 2024ஆம் ஆண்டில் வடகிழக்குத் திறன் நிலையம், அசாம் திறன் பல்கலைக்கழகத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்ட பிறகு நிலைமை மேம்படலாம்; பயிற்சியை முடித்து பணியிடங்களில் சிறப்பாகச் செயல்படும் பழைய மாணவர்கள் இந்த நிலையத்தில் சேரும் விருப்பத்தை மற்றவர்களிடம் விதைப்பார்கள் என்று முதல்வர் நம்பிக்கை தெரிவித்தார்.

