புதுடெல்லி: இமாச்சலப் பிரதேச காங்கிரசின் வழிகாட்டும் குழுத்தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார்.
தமக்கு கட்சியில் உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்று சோனியா காந்திக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாக ஊடகத் தகவல் தெரிவிக்கிறது. காங்கிரஸ் கட்சிப் பொறுப்பில் இருந்து மூத்த தலைவர்கள் அடுத்தடுத்து விலகுவது, அதன் தலைமைக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் தோல்வியை அடுத்து, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலர் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனர். இந்தக் குழு 'ஜி-23' என்று குறிப்பிடப்படுகிறது.
கட்சிக்கு முழுநேரத் தலைவர் வேண்டும் என்றும் நேரு குடும்பத்தைச் சாராத ஒருவர் தலைவராக வேண்டும் என்றும் அக்குழுவில் உள்ள தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். எனினும், காங்கிரஸ் தலைமை இக்குழுவின் கருத்துகளை முழுமையாக ஏற்கவில்லை.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜம்மு காஷ்மீர் தேர்தல் பிரசாரக் குழுத்தலைவர் பதவியில் இருந்து மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் விலகினார். இதையடுத்து, ஆனந்த் சர்மாவும் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகி உள்ளார்.
"கட்சியில் இடம்பெறும் புறக்கணிப்புகளும் அவமானங்களும் என் சுயமரியாதையைப் புண்ணாக்குகின்றன," என்று சோனியாவிற்கு எழுதிய கடிதத்தில் ஆனந்த் சர்மா குறிப்பிட்டுள்ளார்.

