கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் தொடரும் என எச்சரிக்கை
புதுடெல்லி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று டெல்லியில் விவசாயிகள் திரளாகக் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விலைவாசி உயர்வு, வேலை இல்லாத் திண்டாட்டம் உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து விவசாயிகள் நடத்திய இந்தப் போராட்டம் காரணமாக டெல்லியில் பரபரப்பு நிலவியது.
ஜந்தர் மந்தர் பகுதியில் நடைபெற்ற போராட்டத்துக்கு சன்யுக்த் கிசான் மோர்ச்சா என்ற அமைப்பு அழைப்பு விடுத்திருந்தது. இந்த அமைப்பினர்தான் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தையும் ஒருங்கிணைத்தனர்.
குறைந்தபட்சம் ஐயாயிரம் விவசாயிகள் திரளக்கூடும் என்று எதிர்பார்த்த நிலையில், டெல்லியைச் சுற்றியுள்ள எல்லைப் பகுதிகளில் காவல்துறையினர் நேற்று முன்தினம் மாலையில் இருந்தே தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். சில இடங்களில் வாகனப் பரிசோதனையும் நடைபெற்றது. ஆயுதங்கள் கொண்டு செல்லப்படுகின்றனவா என்று கண்காணிக்கப்பட்டது.
இதற்கிடையே டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சன்யுக்த் கிசான் மோர்ச்சா அமைப்பின் தலைவர் பல்தேவ் சிங் சிர்சா, தங்களுடைய கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்காவிட்டால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்றார்.
"பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, தெலுங்கானா, தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் திரண்டுள்ளனர்.
"எங்கள் கோரிக்கைகள் எப்போதுமே போராடினால் மட்டுமே கவனிக்கப்படுகிறது. அது ஏன்?" என்று பல்தேவ் சிங் கேள்வி எழுப்பினார்.
டெல்லியில் போராடத் திரண்டிருப்பவர்கள் அனைவருமே அரசியல் சார்பற்றவர்கள் என்று குறிப்பிட்ட அவர், வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படும் என்று அறிவித்தபடி மத்திய அரசு நடந்துகொள்ளவில்லை என்றார்.
நேற்று நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றனர். இதன் காரணமாக டெல்லியில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டது. எனினும் பல பகுதிகளில் போக்குவரத்து நிலைகுத்தியதால் வாகனமோட்டிகள் தவிப்புக்கு ஆளாகினர்.
போக்குவரத்து நெரிசலை சமாளிப்பதற்கு என கூடுதல் காவலர்கள் களமிறக்கப்பட்டதாக டெல்லி காவல்துறை தெரிவித்தது.
லக்கிம்பூரில் விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு நீதி கோரி வருவதாகக் குறிப்பிட்டுள்ள விவசாயிகள் சங்கத் தலைவர்கள், விவசாய உற்பத்திகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும் இல்லாவிட்டால் போராட்டம் தொடரும் என எச்சரித்துள்ளனர்.

