புதுடெல்லி: தம் மீது பதிவாகி உள்ள வழக்குகள் அனைத்துமே பொய்யான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தொடுக்கப்பட்டவை என்று டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு தாம் அடிபணியப் போவதில்லை என்றும் பாஜகவில் இருந்து தம்மை சிலர் தொடர்புகொண்டதாகவும் கூறியுள்ளார்.
"என் மீதான சிபிஐ, மத்திய அமலாக்கத்துறையின் வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்று பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும் இதற்காக நான் ஆம் ஆத்மி கட்சியில் பிளவை ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டது," என்றார் மணீஷ் சிசோடியா.
டெல்லி அரசின் மதுபானக் கொள்கை நிர்ணயித்தது தொடர்பில் பல்வேறு முறைகேடுகள் உள்ளதாகவும் இது ஊழல் மலிந்த நடவடிக்கை என்றும் சிபிஐ குற்றம்சாட்டி உள்ளது.
இவ்விவகாரம் தொடர்பாக துணை முதல்வர் மணீஷ் சிசோடியாமீது வழக்குப்பதிவு செய்துள்ள சிபிஐ, அவருக்குச் சொந்தமான 21 இடங்களில் அண்மையில் சோதனை மேற்கொண்டது. இந்த நிலையில், தம்மைத் தேடப்படும் நபராக அறிவித்துள்ளனர் என்றும் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் மணீஷ் சிசோடியா கூறியுள்ளார்.
"என் தலையை நானே வெட்டிக் கொள்வேனே தவிர எவர் முன்பாகவும் தலைகுனிந்து நிற்க மாட்டேன். என் மீதான அத்தனை வழக்குகளும் பொய்யானவை. உங்களால் செய்ய முடிந்ததை செய்துகொள்ளலாம்.
"பிரதமரே... நான் எங்கே வர வேண்டும் என்று சொல்லுங்கள்," என்று மணீஷ் சிசோடியா கேட்டுள்ளார்.
ஆனால், துணை முதல்வருக்கு எந்தவிதமான தடையும் விதிக்கப்படவில்லை என சிபிஐ தெரிவித்துள்ளது. புதிய வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள எட்டு தனி நபர்களுக்கு மட்டுமே பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிபிஐ விளக்கம் அளித்துள்ளது.
அண்மையில் டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின், சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கில் கைதானார். அவர் சிறையில் உள்ள நிலையில், டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
"எத்தனை அமைச்சர்களை விசாரித்தாலும் சிறையில் அடைத்தாலும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் ஆட்சி முறையை மாற்ற இயலாது. அவர் மக்களுக்காக தொடர்ந்து செயல்படுவார்.
"நாங்கள் வகுத்த கொள்கைகள் சரியானவை என்பதில் சந்தேகமே இல்லை. புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்தினால்தான் அதன் பலன்கள் என்ன என்பது தெரியவரும். நான் செய்துள்ள ஒரே தவறு, கெஜ்ரிவால் அரசில் கல்வி அமைச்சராக இருப்பதுதான்," என்று மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மணீஷ் சிசோடியாவிடம் பேரம் பேசியதாகக் கூறப்படுவதை பாஜக மறுத்துள்ளது. பாஜகவில் சேரும்படி அவருக்கு அழைப்பு விடுத்தது யார் என்பதை திரு சிசோடியா தெரிவிக்க வேண்டும் என்றும் அக்கட்சி வலியுறுத்தி இருக்கிறது.

