மும்பை: இந்தியாவில் ஆண்டுதோறும் ஐந்து லட்சம் சாலை விபத்துகள் நிகழ்கின்றன என்றும் அவற்றில் சிக்கி 1.5 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழக்கின்றனர் என்றும் மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
விபத்து தடுப்புக்கான விரிவான திட்ட அறிக்கைகளில் ஆலோசகர்கள் பல்வேறு தவறுகள் செய்திருப்பதாக மும்பையில் தேசிய சிவில் (கட்டுமான) பொறியியலாளர்கள் மாநாட்டில் பேசுகையில் அவர் குறிப்பிட்டார்.
"பெரும்பாலான திட்ட அறிக்கைகள் பழைமைவாதம் என்று குறிப்பிடும் வகையில் உள்ளன; பல தவறுகளும் காணப்படுகின்றன. அதற்கான காரணங்கள் தெரியவில்லை.
"எனவே, விரிவான திட்ட அறிக்கைகளைத் தயாரிப்பதில் தரமான மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். தவறுகள் ஏற்படும் இடங்களைக் கண்டறிந்து மேம்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுத்து தயார் செய்ய வேண்டும்," என்றார் நிதின் கட்காரி.
சாலை விபத்துகளின் எண்ணிக்கையைக் குறைப்பதில் மத்திய, மாநில அரசுகள் தீவிர கவனம் செலுத்தி வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

