புவனேஸ்வர்: ஒடிசாவில் கடந்த சில நாள்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் மகாநதி ஆற்றுநீர் அமைப்பில் ஏற்கெனவே கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தண்ணீர்ப்பிடிப் பகுதிகளில் உள்ள சிற்றூர்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளன. பாலாசோர் மாவட்டத்தில் மட்டும் 156 சிற்றூர்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக மாநில அமைச்சர் துகுனி சாகு தெரிவித்தார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் எண்ணிக்கை 9.66 லட்சத்தைத் தாண்டியுள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாநிலத்தின் வடக்குப் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், ஜார்கண்டில் உள்ள நீர்த் தேக்கங்களில் இருந்தும் அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் ஒடிசாவில் ஓடும் முக்கியமான ஆறுகளில் அபாய அளவைக் கடந்து தண்ணீர் செல்கிறது. குறிப்பாக சபர்நரேகா ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் கரையோரப் பகுதிகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. இதனால் பாலாசோர், மயூர்ப்கஞ்ச் மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. 100க்கும் மேற்பட்ட சிற்றூர்கள் வெள்ளத்தில் மூழ்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.
எனவே இந்த பகுதிகளில் வசித்து வரும் 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் நேற்று காலைக்குள் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் 227 தற்காலிக மையங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இந்த பணிகள் தொடர்ந்து நடந்து வருவதாக அவர் கூறினார்.

