புதுடெல்லி: பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் கொடுமை வழக்கில் தண்டனை பெற்ற 11 பேரை குஜராத் அரசு விடுவித்ததை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.
கடந்த 2002ஆம் ஆண்டு குஜராத்தில் கலவரம் வெடித்தது. அப்போது கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானர். அவரது குழந்தை உட்பட குடும்பத்தினர் ஏழு பேர் வன்முறைக் கும்பலால் படுகொலை செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. அதன் முடிவில் 11 பேருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.
இந்நிலையில், குற்றவாளிகள் 11 பேரை குஜராத் அரசு கடந்த 15ஆம் தேதி விடுதலை செய்தது. பல்வேறு தரப்பினரும் மாநில அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரமுகர் சுபாஷினி அலி உள்ளிட்ட மூன்று பேர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.
இதற்கிடையே, பில்கிஸ் பானு வழக்கின் குற்றவாளிகளை கௌரவிப்பது அருவருப்பான செயல் என்று 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்த மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி யுடி சல்வி தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கியதன் மூலம் தாம் ஏதும் சிறப்பாகச் செய்துவிட்டதாகக் கருதவில்லை என்று மும்பையில் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.
"எனது தீர்ப்பு, எனது கடமை. கருணை அடிப்படையில் குற்றவாளிகளை விடுதலை செய்ய மாநில அரசுக்கு உரிமை உள்ளது. இது சட்டத்தின்படி மாநிலத்திற்கு வழங்கப்பட்ட அதிகாரம் ஆகும்.
"குற்றவாளிகளை விடுதலை செய்யப்பட்டதற்கான காரணிகள் என்னென்ன என்பது குறித்து எனக்கு தெரியாது. ஆனால், குற்றவாளிகள் சிலரால் கௌரவிக்கப்படுவது அருவருப்பானது. குற்றவாளிகளும் இத்தகைய கௌரவங்களை ஏற்கக்கூடாது," என்றார் நீதிபதி யுடி சல்வி.

