சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள அமிருதா மருத்துவமனையை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார்.
மாதா அமிருதானந்தமாயி அறக்கட்டளை சார்பில் சுமார் ஆறாயிரம் கோடி ரூபாய் செலவில் இந்த பல்நோக்கு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.
இம்மருத்துவமனையில் 2,600 படுக்கை வசதிகள் உள்ளன. அனைத்துலக தரத்திலான அனைத்து மருத்துவ வசதிகளும் இங்குள்ளன. இதன் மூலம் ஆசியாவின் மிகப்பெரிய தனியார் மருத்துவமனை என்ற பெருமையைப் பெற்றுள்ளது என்று அதன் நிர்வாகத் தரப்பு தெரிவித்துள்ளது.
இங்கு 81 வகையான சிறப்பு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படும். நவீன தொழில்நுட்பக் கருவிகளைக் கொண்ட 64 அறுவை சிகிச்சைக் கூடங்கள், தீவிர சிகிச்சைப் பிரிவுகள் உள்ளன. மேலும் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் 534 படுக்கைகள் உள்ளன.
இம்மருத்துவமனையின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, ஆன்மிகமும் மருத்துவமும் ஒன்றோடு ஒன்று இணைந்த நாடாக இந்தியா திகழ்கிறது என்றார்.
மேலும் நவீனமும் தொழில்நுட்பமும் இணைந்த கலவையால் இந்திய சுகாதாரத்துறை நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

