சென்னையில் நடைபெற்ற தேசிய குத்துச்சண்டை போட்டியில் விபரீதம். சண்டையின்போது தன்னுடைய போட்டியாளர் தனது தலையில் உதைத்ததால், 24 வயது யோரா தாடே எனும் வீரர் உயிரிழந்தார்.
சென்னையில் நடைபெற்ற இறுதிபோட்டியில் அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த தாடேயை எதிர்த்து கேசவ் முடேல் என்பவர் போட்டியிட்டார். இந்தச் சண்டையில் முடேல் தாடேயின் தலையை பலமாக உதைத்தார். இது காலுதைச்சண்டை போட்டி என்பதால் கால்களை பயன்படுத்த அனுமதி உண்டு.
தலையில் அடி விழுந்ததும், தாடே மயக்கம் போட்டு கீழே விழுந்தார். அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுச்செல்லப்பட்டார். அவருக்கு அவசர மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இரண்டு நாள்கள் கழித்து அவர் இன்று உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை தொடங்கியுள்ளனர். இந்தியாவில் கடந்த இரண்டு மாதங்களில் இரண்டு காலுதைச்சண்டை வீரர்கள் மாண்டுள்ளனர்.

