ஆம் ஆத்மி எம்எல்ஏக்களைப் பிரிக்க பாஜக சதி செய்வதாக கெஜ்ரிவால் சாடல்
புதுடெல்லி: 'ஆம் ஆத்மி கட்சியிலிருந்து 40 சட்டமன்ற உறுப்பினர்களைப் பிரிக்க பாரதிய ஜனதா கட்சி (பாஜக) சதிசெய்வதாக ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் குறைகூறியுள்ளார்.
'ஆபரேஷன் லோட்டஸ்' என்ற பெயரில் பாஜக மேற்கொள்ளும் சதி தோல்வியடைய வேண்டும்' என்று திரு கெஜ்ரிவால் தலைமையில் அவரது கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் நேற்று மகாத்மா காந்தி நினைவிடத்தில் வேண்டிக்கொண்டனர்.
டெல்லியில் நேற்று திரு கெஜ்ரிவாலின் இல்லத்தில் ஆம் ஆத்மி கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குப் பின்னர் பேசிய ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சௌரவ் பரத்வாஜ், "மொத்தமுள்ள 62 சட்டமன்ற உறுப்பினர்களில் 50 பேர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். வர இயலாதவர்கள் திரு அரவிந்த் கெஜ்ரிவாலிடம் தொலைபேசி வாயிலாக தங்களின் ஆதரவைத் தெரிவித்தனர். தங்களின் இறுதி மூச்சுவரை ஆம் ஆத்மிக்கு உண்மையாக இருப்போம் என்று அவர்கள் உறுதியளித்துள்ளனர்," என்று கூறினார்.
கூட்டத்திற்குப் பின்னர் திரு கெஜ்ரிவாலும் ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து ராஜ்காட்டில் அமைந்திருக்கும் மகாத்மா காந்தி நினைவிடத்திற்குச் சென்றனர். அங்கே 'பாஜகவின் ஆபரேஷன் லோட்டஸ் சதி முயற்சி தோல்வியடைய வேண்டும்' என்று வேண்டிக்கொண்டனர்.
அதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் கெஜ்ரிவால், "எங்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் 40 பேரை விலைக்கு வாங்க பாஜக தரப்பு முயற்சி செய்தது. இதற்காக 20 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டது. இந்நிலையில் ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினரைக்கூட அவர்களால் விலைக்கு வாங்க முடியவில்லை என்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி," என்று குறிப்பிட்டார்.
டெல்லி சட்டப்பேரவை 70 உறுப்பினர்களைக் கொண்டது. தற்போது இதன் உறுப்பினர்களில் 62 பேர் ஆம் ஆத்மி கட்சியினர். எஞ்சிய எட்டுப் பேர் பாஜக உறுப்பினர்கள்.
இதனால் 40 உறுப்பினர்களைப் பிரிக்க பாஜக திட்டமிடுவதாகக் கூறப்படுகிறது. கட்சித் தாவல் சட்டத்தினை எதிர்கொள்ளாமல் 40 பேர் வரை பிரிக்கப்படலாம் என்பதால் பாஜக இவ்வாறு சதிசெய்வதாக ஆம் ஆத்மி வட்டாரம் சாடுகிறது.

