ஸ்ரீநகர்: இம்மாதம் 21ஆம் தேதி பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற ஆடவரை இந்திய ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தி உயிருடன் பிடித்தனர். பின்னர் ஆடவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், பிடிபட்ட ஆடவர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கோட்லி மாவட்டத்தில் உள்ள சப்ஸ்கோட் கிராமத்தில் வசிக்கும் தபாரக் உசேன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
விசாரணையில், இந்திய ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததை உசேன் ஒப்புக்கொண்டார். பாகிஸ்தான் உளவுத்துறையைச் சேர்ந்த கர்னல் யூனுஸ் சௌத்ரி என்பவர் தனக்கு 30,000 பாகிஸ்தான் ரூபாயைக் கொடுத்து அனுப்பியதாக தபாரக் உசேன் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கடந்த மூன்று நாள்களில் பாகிஸ்தானில் இருந்து ஜம்மு காஷ்மீருக்குள் நுழைய பயங்கரவாதிகள் மேற்கொண்ட மூன்று ஊடுருவல் முயற்சிகள் முறியடிக்கப்பட்டதாக இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

