கடற்கரையில் ஒரே நாளில் 76 டன் நெகிழிக் குப்பைகள் அகற்றம்
விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலத்தில் உள்ள பெரிய கடற்கரைகளில் ஒன்றான விசாகப்பட்டினம் கடற்கரையை சுத்தம் செய்யும் பணி கடந்த வெள்ளிக்கிழமை நடந்தது. அப்போது ஒரே நாளில் 76 டன் பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றப்பட்டன.
மாவட்ட ஆட்சியர் ஏ.மல்லிகார்ஜுனா ஏற்பாட்டில் நடந்த இந்த துப்புரவுப் பணியில், அரசாங்க ஊழியர்கள், மாணவர்கள், தொண்டூழியர்கள், பொதுமக்கள் என 25,000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
பிளாஸ்டிக் புழக்கத்தை குறைக்கும் நடவடிக்கையை ஆந்திரா படிப்படியாக முடுக்கிவிட்டுள்ளது.
அவ்வகையில், ஆந்திராவில் நெகிழிப் பதாகைகள் வைப்பதற்கு தடை விதிப்பதாக அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்தார்.
அரசியல் கட்சிகள், பெரும் நிறுவனங்கள் ஆகியவை சாலைகளில் நெகிழிப் பதாகைகள் நிறுவியுள்ளன. இனி இதுபோன்ற பதாகைகள் துணி அல்லது அட்டை போன்றவற்றால் மட்டுமே அனுமதிக்கப்படும்.
ஆந்திர மாநிலத்தில் கடலில் கலந்த பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி சுத்தம் செய்வதற்கான ஒப்பந்தம் ஒன்றில், பார்லே என்னும் நிறுவனத்துடன் வெள்ளிக்கிழமை ஆந்திர அரசு கையெழுத்திட்டது. இந்நிகழ்ச்சியில் முதல்வர் ஜெகன்மோகன் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர், "வரும் 2027ஆம் ஆண்டுக்குள் நெகிழித் தயாரிப்புகளையும் பயன்பாட்டையும் முற்றிலுமாக தடை செய்த மாநிலமாக ஆந்திரா திகழ வேண்டும். இதுதான் நாம் அடுத்த தலைமுறையினருக்குக் கொடுக்கும் சொத்து.
"அடுத்த தலைமுறையினரின் உடல் நலனில் நாம் அக்கறை கொள்வது அவசியம்" என்று அவர் வலியுறுத்தினார்.
"முன்னதாக திருமலையில் நெகிழிப் பயன்பாட்டைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அது நல்ல பயன் தந்துள்ளது. அதையடுத்து இப்போது திருப்பதி நகரிலும் நெகிழிப் பொருட்களுக்குத் தடை விதித்து மக்களின் ஒத்துழைப்புடன் அதனைத் தீவிரமாக அமல்படுத்தி வருகிறது திருப்பதி மாநகராட்சி. இவ்வாறு படிப்படியாக ஆந்திர மாநிலம் முழுமைக்கும் நெகிழிப்பயன்பாட்டின் ஆதிக்கத்தை முற்றிலும் ஒழித்துக்கட்ட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது," என்றார்

