விதிமுறை மீறி கட்டப்பட்ட கட்டடத்தை இடிக்க நீதிமன்றம் உத்தரவு
நொய்டாவில் கட்டப்பட்ட இரட்டை அடுக்குமாடி கட்டடம் நேற்று மதியம் இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணியளவில் தரைமட்டமானது.
முன்னதாக பிற்பகல் 2.15 மணியிலிருந்து 2.45 மணி வரை நொய்டா நெடுஞ்சாலை போக்குவரவுக்கு மூடப்பட்டது. ஏறக்குறைய 500 காவலர்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். அந்தப் பகுதியில் விமானங்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டது
இந்த நிலையில் துல்லியமாக பிற்பகல் 2.30 மணிக்கு வானுயர காட்சியளித்த இரட்டை அடுக்குமாடிக் கட்டடம் சில நொடிகளில் தரைமட்டமானது.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் நொய்டாவில் 'சூப்பர் டெக்' என்ற நிறுவனத்தின் சார்பில் பிரம்மாண்ட இரட்டை கோபுர குடியிருப்புகள் கட்டப்பட்டன. இதில் 'அபெக்ஸ்' எனும் கோபுரம் 32 மாடிகளைக் கொண்டது. இதன் உயரம் 328 அடி. மற்றொரு கோபுரத்தின் பெயர் சியான். இது, 31 மாடிகளை உடையது. உயரம் 318 அடி. இந்த இரட்டை கோபுரங்கள் கட்டுமான விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதாக வழக்கு தொடுக்கப்பட்டது. புவியியல் சார்ந்து கட்டப்படவில்லை என்றும் புகார் எழுந்தது.
சுமார் 7,000 பேர் தங்கும் வசதி கொண்ட இந்த குடியிருப்பில் இதுவரை யாரும் குடியேறவில்லை.
இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற விசாரணைக்கு வந்த நிலையில் கடந்தாண்டு கட்டடங்களை வெடிவைத்து தகர்க்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை வெடிவைத்து தகர்க்கும் பணியை 'எடிபைஸ் இன்ஜினியரிங்', தென் ஆப்பிரிக்காவைத் தள மாகக் கொண்ட 'ஜெட் டெமாலி ஷன்ஸ்' ஆகிய தனியார் நிறுவனங் களின் நிபுணர்கள் அடங்கிய கூட்டுக்குழு செயல்படுத்தியது.
அதன்படி நேற்று மதியம் 2.30 மணிக்கு இரட்டை கோபுரக் கட்டடம் இடிக்கப்பட்டன.
கட்டடத்தை இடிப்பதற்காக சுமார் 3,700 கிலோ வெடிபொருள்கள் பயன்படுத்தப்பட்டன.
கட்டடம் இடிந்து சரிந்தபோது புழுதியால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இரட்டை கோபுரத்தின் கட்டு மானச் சேதங்களை எடுத்துச் செல்ல மட்டும் 1,200 லாரிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.
இந்தக் கட்டுமானத்தின் மதிப்பீடு சுமார் 300 கோடி ரூபாய் என கூறப் படுகிறது. இரு கட்டடங்களை இடிக்கும் பணிகளுக்காக சுமார் 20 கோடி ரூபாய் ($349,000) செலவு செய்யப்பட்டது.

