பனாஜி: நடிகையும் பாஜக மூத்த தலைவருமான சோனாலி போகட், 43, மரண வழக்கில் 5வது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த சோனாலி போகட், கடந்த சில நாள்களுக்கு முன்பு உதவியாளர் மற்றும் நண்பருடன் கோவாவுக்கு சுற்றுலா சென்றிருந்தார்.
ஆனால் சுற்றுலா சென்ற மறுநாளே மர்மமான முறையில் அவர் உயிரிழந்தார். முதலில் மாரடைப்பால் அவர் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. ஆனால் அவரின் குடும்பத்தினரும் உறவினர்களும் சோனாலி போகட்டின் மரணத்தில் மர்மம் இருப்பதாக காவல்துறையில் புகார் அளித்தனர். இதனால் சோனாலி போகட் கொலை செய்யப் பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையின் விசாரணை தொடங்கியது.
கோவாவில் உள்ள ஒரு கிளப்பில் நடிகை சோனாலி போகட், அவரது உதவியாளர் சுதிர் சங்வான் மற்றும் சுக்விந்தர் சிங் ஆகியோர் ஒன்றாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அங்கு இருவரும் குளிர்பானத்தை நடிகை சோனாலி போகட்டிற்கு வற்புறுத்தி வழங்கியது கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகள் காட்டின.
இதையடுத்து சுதிர் சங்வான், சுக்விந்தர் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் இருவரும், குளிர்பானத்தில் போதைப்பொருள் கலந்து சோனாலி போகட்டிற்கு வழங்கியது தெரிய வந்தது.
இதற்கிடையே வெளியான பிரேதப்பரிசோதனை அறிக்கையில் சோனாலி உடலில் ரத்த காயங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனால் சோனாலி போகட் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
நேற்று முன்தினம் தத்தா பிரசாத் காவங்கர் மற்றும் கர்லீஸ் உணவு விடுதி உரிமையாளர் எட்வின் நூனெஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தற்போது போதைப் பொருள் விற்பனை செய்யும் ரமா மந்த்ரேக்கர் என்பவரையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இதற்கிடையே இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க தயார் என்று ஹரியானா முதல்வர் அறி வித்துள்ளார்.

