புதுடெல்லி: 'என்டிடிவி' எனப்படும் 'நியூடெல்லி டெலிவிஷன்' ஊடக நிறுவனத்தை, இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான கௌதம் அதானி கையகப்படுத்தவிருப்பதாக வெளியான தகவல் நாட்டில் வருங்கால செய்தித்துறைச் சுதந்திரம் குறித்த கவலையை எழுப்பியுள்ளது.
இம்மாதம் 23ஆம் தேதி அதானி குழுமம், 'என்டிடிவி' நிறுவனத்தின் 29.18 விழுக்காட்டுப் பங்குகளை வாங்கியிருப்பதாகத் தெரிவித்தது. விரைவில் மேலும் 26 விழுக்காட்டுப் பங்குகளுக்கு விண்ணப்பிக்க இருப்பதாகவும் அது குறிப்பிட்டது.
செய்தித்துறையைச் சேர்ந்த பிரணாய் ராய், ராதிகா ராய் தம்பதி 1988ஆம் ஆண்டில் 'என்டிடிவி' எனும் தனியார் செய்தி ஒளிவழியைத் தொடங்கினர். இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் தனியார் செய்தி ஒளிவழி என்ற பெருமை இதனைச் சாரும்.
தற்போது ராய் தம்பதிக்கு நிறுவனத்தில் 32.26 விழுக்காட்டுப் பங்குகள் உள்ளன. அதானி குழுமம் நிறுவனத்தைக் கையகப்படுத்துவதற்கு இவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஆனால் சட்ட ரீதியாக இது அடிப்படையற்ற எதிர்ப்பு என்கிறது அதானி குழுமம்.
திரு அதானி ஏலத்தில் வெற்றிபெற்றால் 'என்டிடிவி' நிறுவனத்தின் பெரும்பகுதி அவரது கட்டுப்பாட்டில் வந்துவிடும்.
இந்நிலையில், பெரிய நிறுவனங்கள் அவற்றின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஊடகங்களை வர்த்தக லாபத்துக்குப் பயன்படுத்துவது இயல்பு என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆளுங்கட்சியுடன் நெருங்கிய தொடர்புடையவர்களின் நிறுவனங்கள் ஊடகங்களைக் கையகப்படுத்தும்போது ஊடக சுதந்திரம் குறித்த கவலை எழுவது வழக்கம் என்பதை அவர்கள் சுட்டினர்.
ஊடகத் துறையிலும் 'என்டிடிவி' நிர்வாகம் கைமாறுவது குறித்த தகவல் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு துறைகளில் இனி நியாயமான தகவல்கள் வெளியிடப்படுவதை எதிர்பார்க்க இயலாது என்று பலரும் கருத்துரைத்துள்ளனர். ஆனால் தங்கள் நிர்வாகத்தின்கீழ் செய்தித்துறையின் தரம் செவ்வனே தொடரும் என்று அதானி குழுமம் உறுதி அளித்து உள்ளது.

