புதுடெல்லி: உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் விமானந்தாங்கிக் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த், அடுத்த மாதம் 2ஆம் தேதி நாட்டுக்கான தற்காப்புச் சேவையில் இணைந்துகொள்ளும் என்று இந்தியக் கடற்படை அறிவித்து உள்ளது.
ஏற்கெனவே ரஷ்யாவிடமிருந்து வாங்கப்பட்ட 'ஐஎன்எஸ் விக்ரமாதித்யா' கப்பலையும் சேர்த்து தற்போது இந்தியாவிடம் இரண்டு விமானந்தாங்கிக் கப்பல்கள் உள்ளன. கடந்த ஜூன் மாதம் சீனா அதன் மூன்றாவது விமானந்தாங்கிக் கப்பலை அறிமுகப்படுத்திய நிலையில், 'ஐஎன்எஸ் விக்ராந்த்' இந்தியாவின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
'ஐஎன்எஸ் விக்ராந்த்', 262 மீட்டர் நீளமும் 62 மீட்டர் அகலமும் 43,000 டன் எடையும் கொண்டது.
இந்தக் கப்பலைக் கட்டும் பணிகள் 2009ஆம் ஆண்டு தொடங்கின. பின்னர் 2013ல் அறிமுகம் செய்யப்பட்ட 'ஐஎன்எஸ் விக்ராந்த்', சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து பலமுறை கடற்பரப்பில் சோதிக்கப்பட்டது.
அடுத்த மாதம் 2ஆம் தேதி இதனை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வார்.
'ஐஎன்எஸ் விக்ராந்த்' கப்பல், 'மிக்-29' ரகப் போர் விமானங்களைப் போன்ற 30 விமானங்களை ஏந்திச் செல்லும் ஆற்றல் கொண்டது. நவம்பர் மாதம் முதல் விமானங்கள் இந்தக் கப்பலில் இருந்து கிளம்பிச் சென்று மீண்டும் இறங்கும் சோதனைகள் நடத்தப்படும் என்று கூறப்பட்டது.

