புதுடெல்லி: பாகிஸ்தானில் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதம் குறித்துத் தாம் ஆழ்ந்த வருத்தமடைவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
வெள்ளத்தில் மாண்டவர்கள், காயமடைந்தோரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டார்.
இந்நிலையில், பாகிஸ்தானுக்கு உதவிக்கரம் நீட்டுவது குறித்து மத்திய அரசாங்கம் ஆலோசனை நடத்துவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பாகிஸ்தான் இதுவரை அதிகாரபூர்வமாக இந்தியாவிடம் உதவி கோரவில்லை. இந்தியாவில் இருந்து உணவுப் பொருள்களை இறக்குமதி செய்வது குறித்து பாகிஸ்தானிய நிதியமைச்சர் கோடி காட்டியதாக 'ஜியோ நியூஸ்' செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது.
இதற்கு முன்னர் பாகிஸ்தான் 2010ஆம் ஆண்டு பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோதும் 2005ல் பாகிஸ்தானில் நிலநடுக்கம் உலுக்கியபோதும் இந்தியா நிவாரண உதவி வழங்கியிருக்கிறது.
பாகிஸ்தானில் விரைவில் வழக்கநிலை திரும்புமென்று தாம் நம்புவதாகத் திரு மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

