பந்தளம்: கேரள மாநிலத்தின் பந்தளம் நகரில் ஹரிவராசனம் நூற்றாண்டு விழா நேற்று முன்தினம் தொடங்கியது.
சபரிமலையில் பணியாற்றிய அனந்தகிருஷ்ணன் என்பவரின் மகள் ஜானகியம்மாள், 1923ஆம் ஆண்டு இந்தப் பாடலை இயற்றினார். ஐயப்பனைத் துதிக்கும் இப்பாடல் பின்னர் திரையிசைப் பாடகர் கே.ஜே. ஏசுதாசின் குரலில் இசைத்தட்டாக வெளியானது.
அதன் பின்னர், பல ஆண்டுகளாக ஐயப்பன் சந்நிதியில் நடை அடைக்கும்போது இந்த இசைத்தட்டை ஒலிக்கவிடுவது வழக்கமாகப் பின்பற்றப்படுகிறது.
இந்நிலையில், ஹரிவராசனம் பாடல் இயற்றப்பட்டு நூறு ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடத் தீர்மானித்தது சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம். விழாக் குழுவின் அனைத்துலகத் தலைவராக இசைஞானி இளையராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
தொடக்க விழாவிற்கு பந்தள மன்னர் குடும்பத்தின் சசி குமாரவர்மா தலைமை வகித்தார். ஹரிவராசனம் நுாற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களை நாடு முழுவதும் 18 மாதங்களுக்கு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் 2024ஆம் ஆண்டு ஜனவரி 20, 21ஆம் தேதிகளில் நடைபெறும் நிறைவு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்வார்.

