புதுடெல்லி: இந்தியக் கடற்படைக்குப் புதிய கொடி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் அலுவலகம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் விமானந்தாங்கிக் கப்பலான 'ஐஎன்எஸ் விக்ராந்த்' நாட்டிற்கு அர்ப்பணிக்கப்படும் நாளில் கடற்படைக்கான புதிய கொடியும் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது.
இந்தியத் தற்காப்புத் துறையின் தற்சார்பைக் குறிக்கும் அடையாளம் என்று வருணிக்கப்படும் 'ஐஎன்எஸ் விக்ராந்த்' கப்பலைப் பிரதமர் மோடி நாளை கேரளாவில் நாட்டுக்கு அர்ப்பணிப்பார்.
அந்த நிகழ்ச்சியில் இந்தியக் கடற்படையின் புதிய கொடியையும் அவர் அறிமுகப்படுத்துவார். இதில் காலனித்துவ ஆட்சி தொடர்பான அம்சம் இனி இடம்பெறாது எனக் கூறப்பட்டது.
இந்தியக் கடற்படையின் தற்போதைய கொடியில் 'செயிண்ட் ஜார்ஜ்' சிலுவை, அதன் நடுவில் தேசியச் சின்னம், இடது மேற்புறத்தில் தேசியக் கொடி ஆகியவை இடம்பெற்றுள்ளன.

