புதுடெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிகார போதைக்கு அடிமையாகியிருப்பதாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே (படம்) சாடியுள்ளார்.
திரு கெஜ்ரிவாலுக்கு எழுதிய கடிதத்தில் அவர் இவ்வாறு குறைகூறியுள்ளார். கடிதத்தில், திரு கெஜ்ரிவால் எழுதிய 'சுவராஜ்' எனும் நூலுக்குத் தாம் முன்னுரை வழங்கியதை அவர் சுட்டியுள்ளார்.
"நூலில் நீங்கள் மது ஒழிப்பை ஆதரித்து எழுதியிருந்தீர்கள். அதனால் அனைவரும் உங்கள்மீது நம்பிக்கை வைத்தார்கள். ஆனால் முதல்வர் பதவிக்கு வந்த பிறகு இந்தக் கொள்கையை நீங்கள் மறந்துவிட்டது போலத் தெரிகிறது. டெல்லி அரசின் புதிய மதுக் கொள்கை இதைக் காட்டுகிறது.
இந்தப் புதிய கொள்கை மது விற்பனையையும் மது அருந்துவதையும் ஊக்குவிக்கிறது. எந்த இடத்திலும் மதுபானக் கடைகளைத் திறப்பது இதனால் சாத்தியமாகும், ஊழலை ஏற்படுத்தக்கூடிய இந்தக் கொள்கை மக்களுக்கு நன்மை விளைவிக்காது.
மக்களுக்கும் பெண்களுக்கும் தீங்கு விளைவிக்கும் இந்தக் கொள்கை, உங்கள் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை என்பதைக் காட்டுகிறது," என்று திரு ஹசாரே தமது கடிதத்தில் கூறியுள்ளார்.
ஒரு பேரியக்கத்தில் விளைந்த கட்சிக்கு இது அழகா என்ற கேள்வியையும் அவர் தமது கடிதத்தில் முன்வைத்துள்ளதாகத் தெரிகிறது.
அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 2011ஆம் ஆண்டு அன்னா ஹசாரேவுடன் இணைந்து ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர். திரு கெஜ்ரிவால் அதிகார போதையில் மிதப்பதாகத் திரு ஹசாரே குற்றம்சாட்டியுள்ளார்.
திரு ஹசாரேவின் விமர்சனத்திற்கு முதல்வர் கெஜ்ரிவால் பதிலடி கொடுத்துள்ளார்.
புதிய மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா வீட்டில் நடத்தப்பட்ட 'சிபிஐ' சோதனையில் எதுவும் கிடைக்காததால் பாரதிய ஜனதாக் கட்சி அன்னா ஹசாரேவைப் பயன்படுத்துவதாகத் திரு கெஜ்ரிவால் கூறினார்.
புகழ்பெற்ற ஒருவரை வைத்துத் தனிநபர் தாக்குதல் நடத்துவது அரசியலில் வழக்கமான நடவடிக்கைதான். அன்னா ஹசாரேவை முன்னிறுத்தி பாஜக இப்போது அதைப் பின்பற்றுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
டெல்லியில் பாரதிய ஜனதாக் கட்சிக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையில் நடைபெறும் பனிப்போரில் முதல்வர் கெஜ்ரிவாலைக் குறைகூறி திரு ஹசாரே எழுதிய கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

