புதுடெல்லி: டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி அரசை கவிழ்க்க முயற்சிப்பதாக (ஆபரேஷன் லோட்டஸ்) மத்திய பா.ஜனதா அரசு மீது முதல் அமைச்சர் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியிருந்தார்.
இதில் முக்கியமாக, கலால் கொள்கை விவகாரத்தில் சி.பி.ஐ. வழக்கில் சிக்கியுள்ள துணை முதல் அமைச்சர் மணிஷ் சிசோடியா, தான் ஆம் ஆத்மியை விட்டு விலகினால் தன் மீதான வழக்குகள் மீட்கப்படும் என பாரதிய ஜனதா கட்சி கூறியதாக ஏற்கெனவே அம்பலப்படுத்தி இருந்தார்.
இதைப்போல பல சட்டமன்ற உறுப்பினர்களை அச்சுறுத்தியும், பணம் கொடுத்தும் தன் பக்கம் இழுக்க பாஜக முயற்சி செய்ததாக ஆம் ஆத்மி குற்றச்சாட்டை கிளப்பி இருந்தது.
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ரூ.20 கோடி வரை பேரம் பேசப்படுவதாகவும் புகார் கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து தனது அரசுக்கான பெரும்பான்மையை நிரூபிக்கும் வகையில் முதல் அமைச்சர் கெஜ்ரிவால், சட்டசபையின் நடப்பு கூட்டத்தொடரில் நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தார்.
அந்த வாக்கெடுப்பில் அக்கட்சியில் உள்ள 62 சட்டமன்ற உறுப்பினர்களில் 58 பேர் அரவிந்த் கெஜ்ரிவால் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இந்நிலையில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் யாரும் பாஜக வசம் செல்லவில்லை என்பதை நிரூபிப்பதற்காக டெல்லி சட்டசபையில், முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று தாமாக முன்வந்து நம்பிக்கை வாக்கு கோரினார்.
எஞ்சியுள்ள நான்கு பேரில் ஒருவர் சபாநாயகர். மற்ற மூன்று பேர் மட்டுமே அவைக்கு வரவில்லை.
இதன் மூலம் டெல்லி சட்டப்பேரவையில் தமது அரசுக்கு உள்ள பெரும்பான்மையை மீண்டும் கெஜ்ரிவால் நிரூபித்தார். அவைக்கு வராத 3 ஆம்ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்களில் இருவர் வெளிநாடு சென்றுள்ளதாகவும் ஒருவர் சிறையில் உள்ளதாகவும் கெஜ்ரிவால் விளக்கம் அளித்தார்.
எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கும் பாஜகவின் முயற்சி மற்ற மாநிலங்களில் வேண்டுமானால் எடுபடும். ஆனால் டெல்லியில் எடுபடாது எனக் கூறிய முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் 'ஆப்ரேஷன் லோட்டஸ்' தோல்வி அடைந்துவிட்டதாக தெரிவித்தார். துணை முதல் அமைச்சர் மணிஷ் சிசோடியா வீட்டில் சிபிஐ சோதனை நடத்தியதற்குப் பின்னர் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள குஜராத் மாநிலத்தில் ஆம்ஆத்மியின் வாக்கு 4 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
டெல்லி பேரவையில் நம்பிக்கை தீர்மானம் என்பது ஆம் ஆத்மி அரசின் ஊழலை திசை திருப்புவதற்காக மேற்கொள்ளப்படும் நாடகம் என்று பாஜக சாடியுள்ளது.

