புதுடெல்லி: மனித நேயத்திற்காக தங்கள் உறுப்புகளைத் தானம் செய்ய மக்கள் முன்வருவதை ஊக்குவிக்க வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவ்யா தெரிவித்துள்ளார்.
உடல் உறுப்பு தானத்தை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
"உறுப்பு தானம் செய்ய மக்களை ஊக்குவிப்பது என்பது அரசாங்கத்தாலோ அல்லது தன்னார்வத் தொண்டு நிறுவனங்களாலோ மட்டும் சாத்தியமாகிவிடாது.
"இத்தகைய முயற்சி வெற்றி பெற, அது மக்கள் இயக்கமாக மாற வேண்டும்," என்று 'ஆரோக்கியமான வலுவான இந்தியா' என்ற தலைப்பில் நடைபெற்ற மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசியபோது அவர் குறிப்பிட்டார்.
"உடல் உறுப்பு, கண் தானம் குறித்த தேசிய மக்கள் இயக்கம் வெற்றி பெற அனைவரும் உழைக்க வேண்டும். உடல் உறுப்பு தான இயக்கத்தின் அனைத்து முயற்சிகளையும் ஆதரிப்பதற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சு முழு மனதுடன் உறுதி பூண்டுள்ளது," என்றார் மன்சுக் மாண்டவ்யா.
சொந்த நலனை மட்டுமல்ல, பொதுநலன் குறித்தும் சிந்திப்பதே இந்திய பாரம்பரியம் என்றும் அவர் கூறினார். இந்தியாவில் உடல் உறுப்பு, கண் தானத்தின் தற்போதைய சூழ்நிலை குறித்தும் எதிர்காலத்தில் வரவிருக்கும் சவால்களுக்குத் தீர்வு காண்பது குறித்தும் மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.