புதுடெல்லி: மத்திய அரசு, வருவாய் பற்றாக்குறை மானியமாக 14 மாநிலங்களுக்கு 7,183 கோடி ரூபாயை வழங்கியுள்ளது.
2022-23 நிதி ஆண்டுக்கு, நிதிப் பகிர்வுக்குப் பிந்தைய வருவாய் பற்றாக்குறையாக 14 மாநிலங்களுக்கு 86,201 கோடி ரூபாய் வழங்க 15வது நிதிக் குழு பரிந்துரைத்தது.
அதன்படி, இந்தத் தொகை 12 மாதத் தவணையாக குறிப்பிட்ட மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 6வது தவணையாக இந்த மாதத்துக்கு உரிய 7,183 கோடி ரூபாயை மத்திய அரசின் செலவினத் துறை வழங்கியுள்ளது.
ஆந்திரப் பிரதேசம், அசாம், இமாச்சலப் பிரதேசம், கேரளா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், திரிபுரா, உத்தரகண்ட், மேற்கு வங்கம் ஆகியவை இதனால் பலனடையும் 14 மாநிலங்கள்.
அரசமைப்புச் சட்டம் 275ன் அடிப்படையில், நிதிப் பகிர்வுக்குப் பிந்தைய வருமானப் பற்றாக்குறை மானியம் வழங்கப்படுகிறது. நடப்பு நிதி ஆண்டுக்கு இதுவரை 43,100 கோடி ரூபாய் வழங்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.