மதுரை: கோயில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
விழா நிகழ்வுகளில் அநாகரிக மான உரையாடல்கள், இரட்டை அர்த்த பாடல்கள்; அரசியல், கட்சி, சமயம், சமூகம், சாதியைக் குறிப்பிடும் பாடல்கள் இடம்பெறக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில், கோயில் திருவிழாக்களில் இரவு நேரத்தில் ஆடல்-பாடல் கலை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு அனுமதிக்கக் கோரி பல்வேறு மனுக் கள் தாக்கல் செய்யப்பட்டன.
அவை அனைத்தையும் ஒன்றாக விசாரித்த நீதிபதி சக்திகுமார் சுகுமார குரூப், "ஆடல் பாடல் நிகழ்ச்சி களில் ஆபாச நடனமோ, அநாகரீகமான பேச்சோ இருக்கக்கூடாது," என நிபந்தனை விதித்தார்.
"நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்போர் நாகரிகமான உடைகள் அணியவேண்டும். இரட்டை அர்த்த பாடல்கள் இடம்பெறக் கூடாது," எனவும் ஆணையிட்டார்.
ஆடல், பாடல் நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் குட்கா, மதுபானங்களை உட்கொள்ளக்கூடாது என தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம், பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் எந்தவித இடையூறும் ஏற்படுத்தக்கூடாது எனவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கோயில் விழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் இரவு 7 முதல் 10 மணிவரை மட்டுமே நடத்தவேண்டும் என்றும் நீதிபதி சக்திகுமார் நிபந்தனை விதித்துள்ளார்.
கபடிப் போட்டிக்கும் கட்டுப்பாடு
இதேபோல், திருநெல்வேலி மாவட்டம், விஜய நாராயணபுரத்தைச் சேர்ந்தவர்கள் கபடி போட்டி நடத்த அனுமதி கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி, கபடிப் போட்டியில் பங்கேற்கும் வீரர்களின் உடைகளில் அரசியல் கட்சி சின்னங்கள், தலைவர்களின் படங்கள், சாதி ரீதியான அடையாளங்கள் இருக்கக்கூடாது என்று உத்தரவிட்டார்.
கபடிப் போட்டி நடக்கும் இடங்களில் மருத்துவர்களும் சிகிச்சைக்கான உபகரணங்களும் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்திய நீதிபதி, போட்டியில் பங்கேற்பவர்கள் போதைப்பொருளோ மதுவோ அருந்தியிருக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டார்.
நிபந்தனைகளை மீறுபவர்கள் மீது காவல்துறை நடவடிக்கைகள் எடுத்து போட்டியை நிறுத்தலாம் என்றும் நீதிபதி ஆணையிட்டு உள்ளார்.

