பெங்களூரு: கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரில் தென்மேற்குப் பருவமழை வழக்கத்தைவிட அதிக அளவில் பெய்ததால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
வரலாறு காணாத பெருமழை நகர மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பெரிதும் பாதித்துள்ளது.
இம்மாதம் 4ஆம் தேதி இரவு கனமழை பெய்ததையடுத்து மகாதேவபுரா, பொம்மனஹள்ளி, ஒய்ட்ஃபீல்டு, பெல்லந்தூர், இந்திராநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது. குடியிருப்புகள் நீரில் மூழ்கின.
சில இடங்களில் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் நிறுத்தப்பட்டிருந்த விலை உயர்ந்த கார்களும் இருசக்கர வாகனங்களும் நீரில் மூழ்கிச் சேதமடைந்தன.
பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடம்பர வீடுகளில் வசித்த பலரும் வீட்டை விட்டுப் பாதுகாப்பான இடம்தேடி வெளியேறும் நிலை ஏற்பட்டது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் செயல்படும் நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்து வேலை பார்க்க அறிவுறுத்தின.
தற்போது வெள்ளம் வடிந்துள்ளதால் வீடுகளுக்கும் அலுவலகங்களுக்கும் திரும்பிய உரிமையாளர்கள், விலையுயர்ந்த பொருள்கள் வெள்ளத்தால் சேதமடைந்ததாகக் கூறினர். மொத்தத்தில் ரூ.2,000 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டதாகக் கருதப்படுகிறது. முறைப்படி ஆய்வுசெய்து மதிப்பிட்டால்தான் சேதத்தின் அளவு தெரியவரும்.

