திருவனந்தபுரம்: காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் ஊட்டும் விதமாக அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை நடைப்பயணத்துக்கு கேரளாவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் தமது நடைப்பயணத்தை நிறைவு செய்த ராகுல் காந்தி, தற்போது கேரளாவில் முகாமிட்டுள்ளார். அவர் அடுத்த இரு வாரங்களுக்கு மேலாக அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு நடைப்பயணம் மேற்கொள்வார்.
கேரளாவில் நேற்று தன் பயணத்தைத் தொடங்கிய ராகுல், அங்குள்ள ஏழு மாவட்டங்களுக்குச் சென்று பொதுமக்களையும் கட்சியினரையும் சந்தித்துப் பேச உள்ளார்.
முன்னதாக, தமிழகத்தில் தனது பயணத்தை முடித்துக்கொண்ட அவர், மக்களின் உழைப்புக்கான ஊதியம் கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே தாம் பயணம் மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டார்.
"தமிழக மக்களின் நலனில் எனக்கு தனிப்பட்ட ஈடுபாடு உள்ளது. நான் பெரியார் மண்ணை விட்டு வருத்தத்துடன் திரும்பிச் செல்கிறேன். அதேசமயம் நாராயண குரு பிறந்த கேரளத்துக்குள் செல்வதை நினைத்து மகிழ்கிறேன். எனது நான்கு நாள் தமிழகப் பயணம் வெற்றிகரமாக அமைந்தது," என்றார் ராகுல்.
இதற்கிடையே, கேரளாவில் ராகுலுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது என்றும் ஆயிரக்கணக்கான மக்கள் அவரை வரவேற்பதாகவும் அம்மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

